உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கழிவு நீர் தொட்டியில் நடக்கும் விபத்துக்கு உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

கழிவு நீர் தொட்டியில் நடக்கும் விபத்துக்கு உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 'தனியார் கட்டிய கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் போது இறப்பு ஏற்பட்டால், அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, விநாயகபுரத்தை சேர்ந்த யோகேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு: விநாயகபுரம் பகுதியில், கழிவு நீர் இணைப்பு இல்லை. சென்னை மாநகராட்சிக்கு, பல முறை மனுக்கள் அனுப்பியும் இணைப்பு வசதி வழங்கவில்லை. இதையடுத்து, சொந்த செலவில் கழிவு நீர் தொட்டி கட்டினேன். மாநகராட்சி ஊழியர்கள், அவ்வப்போது நிரம்பிய கழிவு நீரை அகற்றுவர். கடந்த 2013 செப்., 30ல், மாநகராட்சி 3வது மண்டல ஊழியர்கள், வீட்டில் நிரம்பிய கழிவு நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மது அருந்தி இருந்த முனுசாமி என்ற ஊழியர், கழிவு நீர் தொட்டியில் திடீரென ஆழமான பகுதிக்குள் இறங்கினார். மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்; ஆனால், முடியவில்லை.விஷ வாயுவால் மூச்சுத்திணறி முனுசாமி இறந்த சம்பவம் குறித்து, மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தேன். முதல் கட்டமாக கருணை அடிப்படையில், முனுசாமியின் குடும்பத்துக்கு, 55,000 ஆயிரம் இழப்பீடாக கொடுத்தேன். பின், முனுசாமியின் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, சென்னை மாநகராட்சி, 3வது மண்டல அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். எங்கள் பகுதி முழுதும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால் தான், கழிவு நீர் தொட்டி கட்டியுள்ளோம். முனுசாமியின் இறப்பு துரதிருஷ்டவசமானது. என் சொந்த பணத்தை அவரது மனைவியிடம் கொடுத்தேன். இந்நிலையில், முழு இழப்பீடு தொகையை வழங்கும்படி, மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியது விதிகளுக்கு முரணானது. எனவே, மண்டல அதிகாரி நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர் ஏ.சி.மணிபாரதி ஆஜராகி, ''தனியாரின் கழிவு நீர் தொட்டியில் விபத்து ஏற்பட்டால், அதற்கு அந்த வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பாவார். வீட்டு உரிமையாளர் தான் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும். ''இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது. உரிய விதிகளின்படியே, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என, வாதிட்டார்.இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒரு தனி நபரின் இறப்புக்கு பொறுப்பாகி உள்ளார். எனவே, உரிய விதிகளின் அடிப்படையில் தான் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'சென்னை மாநகராட்சி இழப்பீடு தொகையை, பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் கொடுத்துள்ளது. அந்த தொகையை மனுதாரரிடம் வசூலிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கலாம்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

VRM
பிப் 02, 2025 15:22

இதுபோன்று வாய்க்குவந்ததை தீர்ப்பாக சொல்லி அரசு பணத்தை தெண்டசம்பளமாக வாங்கிக்கொண்டு போகும் நீதிபதிகள் நமது நீதிதுறையில் பலர் உள்ளனர். தீர்ப்பு வெளிவந்தபின் அதை ரெவியூ செய்ய அரசு ஒரு அமைப்பை நிறுவவேண்டும். தீர்ப்பு ஆபத்தமாக இருந்தால் தெண்டசம்பள நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கலாம்.


Karthik
பிப் 02, 2025 15:01

மீண்டும் ஒரு தப்பான தீர்ப்பு .


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 12:38

அரசின் கடமையை எடுத்து சொல்ல ஐகோர்ட் தயங்குவது ஏன் ?


அப்பாவி
பிப் 02, 2025 12:28

கழிவுகளை அகற்ற வேண்டியது அரசின் கடமைன்னு சொல்லத் துப்பில்லை. வரி வாங்கித்தானே இவிங்களுக்கும் சம்பளம் குடுக்குறாங்க?


கல்யாணராமன் சு.
பிப் 02, 2025 12:02

இரண்டு மூன்று கோணங்களில் பார்த்தால் இந்த தீர்ப்பு தவறானது என்று தோன்றுகிறது ... முதலாவதாக, நகராட்சி vendor என்பது மக்களுக்கு client, பொருட்களையோ product அல்லது சேவையையோ service அளித்து, அதற்கு கட்டணத்தைப் பெறும் ஒரு நிறுவனம். சொத்துவரி என்பது நகராட்சிக்கு செலுத்தப்படும் கட்டணம். அந்த கட்டணத்திற்கு நகராட்சி சேவையாக அளிக்க வேண்டியது குடிநீர், கழிவு நீரகற்றம், தரமான சாலைகள் போன்றவை. எனவே கட்டணத்தை வசூலித்துக்கொண்டு, அதற்கு உரிய சேவையான கழிவுநீரகற்றும் கட்டமைப்பை தராதது "சேவை குறைபாடு deficiency of service என்பது போலத்தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் காணப்படும்.. அதற்கு நகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நுகர்வோர் அல்ல. இரண்டாவதாக, ஒரு சேவைக்கு தனி கட்டணம் வசூலித்து அதற்கு தனது ஊழியர்களை அனுப்பும் போது, நகராட்சி ஒரு ஒப்பந்ததாரராக contractor ஆகிவிடுகிறது. ஒப்பந்ததாரரின் ஊழியர்களின் ஊதியம், காப்பீடு, பாதுகாப்பு போன்றவற்றிற்கு ஒப்பந்ததாரர்தான் பொறுப்பாக முடியும். வாடிக்கையாளர் அல்ல. உதாரணத்துக்கு வீட்டிற்கு வர்ணம் paint அடிக்க வரும் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களுக்கான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும். எனவே வாடிக்கையாளர்களை இந்த பொறுப்பாக்கும் இந்த தீர்ப்பு குறைபாடானது ...


Shekar
பிப் 02, 2025 10:57

சுத்தம் செய்தது சென்னை மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அவர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டியது, அவர்களை பாதுகாக்கவேண்டியது மாநகராட்சியின் கடமை. இதில் உரிமையாளர் ஏன் கொடுக்க வேண்டும். நாட்டாமை தீர்ப்பு புரிபடவில்லையே


S. Neelakanta Pillai
பிப் 02, 2025 09:45

தவறான தீர்ப்பு.


Kasimani Baskaran
பிப் 02, 2025 07:26

அரசு கள்ளச்சாராயம் காய்ச்சவில்லை - ஆனால் அரசாங்கம் பணத்தை அள்ளிக்கொடுத்தது. இங்கு அரசாங்கம் அடிப்படை வசதிகளை செய்யாமல் காமடி செய்து விட்டு ஊழியர் மரணம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்தான் பொறுப்பு என்கிறது. ஏற்கனவே மனிதர்களை இது போன்ற பணிகளுக்கு உபயோகிக்கக்கூடாது என்று தெரிந்தும் அரசு எப்படி அனுமதிக்கிறது - ஒருவேளை ஜாதிவன்மமாகக்கூட இருக்கலாம்.


Ranjith Rajan V
பிப் 02, 2025 06:59

இது எப்படி தனியாரின் தவறாகும். கழிவு நீர் தொட்டி கட்ட அவர் அளித்த மனுக்கள் ஏன் ஏற்கப்படவில்லை. கழிவு நீரை தெருவில் கொட்டினால் மட்டும் அரசாங்கம் ஏற்குமா ? உயிரிழந்தவர் மாநகராட்சி ஊழியர் தானே ஏன் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உள்ளே இறங்கினார். ? அவருக்கு மாநகராட்சி உபகரணங்கள் வழங்கப்படவில்லையா ? மனித கழிவை மனிதன் அகற்ற கூடாது என்ற விதி உள்ளதே. பிறகு ஏன் இயந்திரங்கள் இல்லாமல் மனிதன் இறங்கி சுத்தம் செய்கிறான் ? இப்படி தனியார் பொறுப்பு என்று தட்டி கழிக்க ஏன் வரி வாங்குகிறீர்கள் ?


Ram
பிப் 02, 2025 06:44

ஒரு கேவலமான தீர்ப்பு , மக்களுக்கு அடிப்படை வசதி செய்துதரமல் ஏமாற்றும் அரசியல்வாதிகளை தண்டிக்க துப்பில்லை , இவங்களுக்கெல்லாம் வக்கீல் பட்டம் கொடுத்தது யாரு


புதிய வீடியோ