| ADDED : ஜூன் 19, 2025 01:33 AM
திருநெல்வேலி: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்காக நிதி வசூல் செய்த ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஹிந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட இயக்கங்கள் சேர்ந்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை வரும் ஜூன் 22ல் நடத்துகின்றன.'எல்லா இயக்கங்களையும் போல, அர்ஜுன் சம்பத் தலைமையிலான ஹிந்து மக்கள் கட்சியும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்தோரும் மாநாட்டில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அக்கட்சியை சேந்த பலர், தமிழகத்தின் பல இடங்களிலும் மாநாட்டுக்காக நிதி வசூல் செய்யும் தகவல் வந்துள்ளது. அது தவறான காரணம், இந்த மாநாட்டுக்கும் ஹிந்து மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது' என, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன், தன் கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். கூடவே, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் வசூல் செய்து கொடுத்திருந்த ரசீதையும் ஆவணமாக பதிவிட்டுஇருந்தார்.இந்தப் பதிவை அடுத்து, ----------------துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் கிரஷர் நிறுவனம் ஒன்றில் இருந்து, மாநாட்டிற்கு 10,000 ரூபாய் வசூல் செய்த, ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகி ஞானசுந்தரம் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் மாநில செயலர் வசந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இதையடுத்து, ஹிந்து மக்கள் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருந்த ஹிந்து முன்னணியினர் கொஞ்சம் சமாதானமாகி உள்ளனர்.