சுயசான்று முறையில் 4 வீடுகள் கட்ட அனுமதி கிடைக்குமா?
சென்னை: சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தில், அனுமதிக்கப்படும் வீடுகள் எண்ணிக்கையை நான்காக உயர்த்தும் அரசின் உத்தரவுக்காக, கட்டுமானத் துறையினர் காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 10,000 சதுரடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. 10,000 பேருக்கு அனுமதி
இதில், 2,500 சதுரடி வரையிலான நிலத்தில், 3,500 சதுரடி வரையிலான பரப்பளவுக்கு வீடு கட்டுவோருக்கு, சுய சான்று முறையில் திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.இந்த திட்டம் அமலுக்கு வந்து நான்கு மாதங்களான நிலையில், 10,000க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் முறையில், உடனடி கட்டட அனுமதி பெற்றுள்ளனர். உள்ளாட்சி அதிகாரிகளின் பரிசீலனைக்காக காத்திருக்காமல், ஆன்லைன் முறையில் ஆவணங்களை தாக்கல் செய்து கட்டணம் செலுத்திய, 30 நிமிடங்களில் கட்டட அனுமதி கிடைப்பதால், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இத்திட்டத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.இதுகுறித்து, கட்டுமானத் துறையினர் கூறியதாவது:அரசு அனுமதித்துஉள்ள எப்.எஸ்.ஐ., எனப்படும், தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில், 2,500 சதுரடி நிலத்தில், இரண்டு மடங்கு அளவில், அதாவது, 5,000 சதுரடி அளவுக்கு கட்டட பரப்பளவை அனுமதிக்கலாம். ஆனால், சுயசான்று முறையில், 2,500 சதுரடி இடத்தில், 3,500 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு மட்டுமே, அதாவது இரு வீடுகளுக்கு மட்டுமே உடனடி கட்டட அனுமதி கிடைக்கிறது.வீடுகள் எண்ணிக்கையை நான்காக அதிகரிக்கும்படி அரசிடம் கேட்டுள்ளோம். குறைந்த விலை
இது தொடர்பான புரிதல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எப்.எஸ்.ஐ., சலுகையை முழுமையாக பயன்படுத்தி, நான்கு வீடுகள் வரை கட்ட அனுமதிக்கும் அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். இந்த மாற்றம் வந்தால், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர், குறைந்த விலையில் வீடுகள் பெற வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.