ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் வெற்றி
திருச்சி: “கூட்டணிக்காக அ.ம.மு.க.,வை பல கட்சிகள் பல மாதங்களாக அணுகுகின்றன,” என, அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார். திருச்சியில் அவர் அளித்த பேட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் தான் வெற்றி சாத்தியம். இப்படி சொல்வதால் நான் மனமாற்றம் அடைந்து விட்டேன் என அர்த்தம் கிடையாது; எனக்கு யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுத்து தலைவரை வழிக்கு கொண்டுவர முடியும்; தொண்டர்களை அழைத்து வர முடியாது. அரசியல் அனுபவம் உள்ள எந்த ஒரு கட்சியும் அந்த செயலை செய்ய மாட்டார்கள். கூட்டணிக்காக, அ.ம.மு.க.,வை பல மாதங்களாக பல கட்சிகள் அணுகி வருகின்றன. ஆனால், நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை; இன்னும் நேரம் உள்ளது. வலுவாக இருக்கும் தி.மு.க. கூட்டணியில் என்ன நடக்கிறது? காங்கிரஸ் நிலை என்ன? 'சீட்' ஒதுக்கீடு செய்யப்பட்டதா? அதேபோல், வி.சி., - ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளதா? அதுவரை எங்களுக்கு கால அவகாசம் உள்ளது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், துாய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இது, மக்களின் நம்பிக்கையை தி.மு.க., அரசு இழந்து வருவதை காட்டுகிறது. இவ்வாறு தினகரன் கூறினார்.