UPDATED : டிச 03, 2025 04:20 PM | ADDED : டிச 03, 2025 04:14 PM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் 105 ஆண்டுக்குப் பிறகு இன்று மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (டிச.,3) நடைபெறுகிறது. இங்கு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என பக்தர்கள் விரும்பினர். ஆனால், மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் 1920 ம் ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி அமைப்பு நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்காக பல்வேறு போராட்டங்களை இந்த அமைப்பு முன்னெடுத்தது.மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். அதற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என உத்தரவிட்டு இருந்தார்.இதனை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவு அடிப்படையில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு கோயிலில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இன்று மாலையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.