ரூ.12.5 கோடி இழப்பு: மாதம்பட்டி நிறுவனம் ஐகோர்ட்டில் தகவல்
சென்னை:'ஜாய் கிரிசில்டா செயலால், இரண்டு வாரங்களில் 12.5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னை ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும், 'டேக்' செய்திருந்தார். இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, 'மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில் குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, 'இவ்விவகாரத்தில், ஜாய் கிரிசில்டா தங்களை தொடர்புபடுத்தி பேசியதால், 15 நாட்களில் 12.5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 'இந்த விவகாரம் தொடர்பாக, ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல், ஓய்வு பெற்ற நீதிபதி முன், மத்தியஸ்த பேச்சுக்கு ஜாய் கிரிசில்டா முன்வர வேண்டும்' என்றனர். ஜாய் கிரிசில்டா சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, 'மத்தியஸ்த பேச்சுக்கு செல்ல விரும்பவில்லை' என்றார். இதையடுத்து, 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற் பட்டதாக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, உரிய ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.