உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய அளவில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை உயரும்; தமிழகத்தில் இல்லை என்கிறது இயக்குனரகம்

தேசிய அளவில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை உயரும்; தமிழகத்தில் இல்லை என்கிறது இயக்குனரகம்

சென்னை: 'அகில இந்திய ஒதுக்கீட்டில் கூடுதலாக, எம்.பி.பி.எஸ்., இடங்கள் சேர்க்கப்படுவதால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தாமதமாகும்' என, மத்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் மருத்துவ இடங்கள் உயர வாய்ப்பில்லை என, மாநில மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. நாடு முழுதும் அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மொத்த இடங்களில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீடுக்கு செல்கின்றன. அதேபோ ல, எய்ம்ஸ், ஜிப்மர், மத்திய மற்றும் நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ இடங்களை, மத்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நிரப்பி வருகிறது. அதன்படி, 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான முத ற்கட்ட கவுன்சிலிங், https://mcc.nic.in/ug-medical-counselling என்ற இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டு, அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதில், 'நீட்' தேர்வில், 720க்கு, 665 பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்ற, திருநெல்வேலியை சேர்ந்த மாணவர் சூர்யநாராயணன், அகில இந்திய மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று, டில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' பெற்றார். முதற்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று, கல்லுாரிகளில் சேராதவர்களின் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். அதன்படி, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., இடங்களை அதிகரிப்பதற்கான பணிகளை, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., செய்து வருகிறது. புதிதாக வரும் எம்.பி.பி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டி இருப்பதால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் தேதி விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் இருக்கும் அரசு மருத்துவ கல்லுாரிகளில், 150 ஆக எண்ணிக்கையை உயர்த்தக்கோரி, என்.எம்.சி.,யிடம் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே, என்.எம்.சி., அறிவிப்பால், தமிழக மருத்துவ கல்லுாரிகளிலும் இடங்கள் அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் தேரணிராஜன் கூறுகையில், ''மருத்துவ இடங்கள் அதிகரிப்பதற்கான எந்த அறிவிப்பையும், என்.எம்.சி., தமிழகத்திற்கு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள இடங்களில் தான் சேர்க்கை நடக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

David D
ஆக 24, 2025 13:06

தமிழகத்தில் நீட் பாஸ் ஆகும் விகிதம் கூடிகொண்டே போகிறது. ஆனால் பக்கத்துக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் 500 கு மேல் நீட் மார்க் எடுத்தவர்கள் மிக குறைவு. மேலும் நமது மாணவர்கள் அடுத்த மாநிலங்களில் உள்ள MBBS சீட்டை நிரப்ப தயக்கம் காட்டுகின்றனர். இதனால் நமக்குள்ளே போட்டி அதிகமாக நிலவுகிறது. ஆனால் வட மாநில மாணவர்கள் இங்கு வந்து MCC 15% கோட்டா வாயிலாக நிரப்புகின்றனர். காரணம் இந்தி நமது மாணவர்களுக்கு தெரியாது . நீட் தேர்வு இருப்பதனால் மட்டுமே எல்லா நிலையிலும் உள்ள மாணவர்கள் MBBS படிக்க வாய்ப்பு கிடைக்கிறது


ஆரூர் ரங்
ஆக 24, 2025 11:40

ஏற்கனவே அதிக மருத்துவக் கல்லூரிகளுள்ள தமிழகம் போன்ற மாநிலங்கள் இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி கிடைக்காது. குறைந்த அளவு கல்லூரிகளை கொண்ட மாநிலங்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கை அமலில் உள்ளது. புதிய கல்லூரிகளை அமைக்கும் செலவில் 60 சதவீதம் மத்திய மானியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை