அரசு நிலம் அபகரிப்பு வழக்கு அமைச்சர் ஆஜராக உத்தரவு
சென்னை:'அரசுக்கு சொந்தமான நிலத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர், மே 6ல் ஆஜராக வேண்டும்' என, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எதிராக புகார் அளித்தார்.அதில், 'சென்னை கிண்டி தொழிலாளர் காலனியில், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த குடியிருப்பை, தற்போதைய அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, போலி ஆவணங்கள் வாயிலாக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தன் மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்' என கூறியிருந்தார்.இப்புகாரின்படி, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா உள்ளிட்டோருக்கு எதிராக, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், 2019ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் தாக்கல் செய்த மனு, கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, நீதிபதி ஜி.ஜெயவேல் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. மாறாக, 'சட்டசபை கூட்டம் நடந்து வருவதால், விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி ஜி.ஜெயவேல், வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக, சுப்பிரமணியன், அவரது மனைவி ஆகியோர் மே 6ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.