எச்.ஐ.வி., தொற்றாளர்களுக்கு ஓய்வூதியம் அமைச்சர் சுப்பிரமணியன் கைவிரிப்பு
சென்னை:''தமிழகத்தில் உள்ள, எச்.ஐ.வி., தொற்றாளர்களுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், ஓய்வூதியம் வழங்க வாய்ப்பில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - கிருஷ்ணமுரளி: கடையநல்லுார் தொகுதியில், 500 எச்.ஐ.வி., தொற்றாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 1,000 - 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில், 100 பேருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. கூட்டு மருந்து சிகிச்சை பெறும், எச்.ஐ.வி., தொற்றாளர்கள் பலவீனமாக உள்ளதால், வேலைக்கு செல்லும் சூழல் இல்லை. எனவே, அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.அமைச்சர் சுப்பிரமணியன்: தமிழகத்தில் எய்ட்ஸ் பாதித்தவர்கள், 1.57 லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்காக, 76 இடங்களில், கூட்டு மருந்து சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இதில், 1.41 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், 4,596 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, வருவாய் துறை வாயிலாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வு துறை வாயிலாக, தனியாக நிதியுதவி வழங்கும் திட்டம் அரசிடம் இல்லை. 2009ம் ஆண்டு, எய்ட்ஸ் பாதித்தவர்களின் குழந்தைகளுக்காக, 5 கோடி ரூபாய் மதிப்பில், கருணாநிதி அறக்கட்டளை ஒன்றை துவக்கினார்.அந்த நிதி தற்போது, 25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிதியில், எய்ட்ஸ் பாதித்தவர்களின் குழந்தைகளுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.கிருஷ்ணமுரளி: தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, 'கேத்லேப்' வசதி ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு சிறுபான்மையினருக்கான, மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 'கேத்லேப்' வசதி ஏற்படுத்த, 60 சதவீத நிதி தருகிறது. மாநில அரசு, 40 சதவீத நிதி வழங்கினால், தென்காசி மருத்துவமனையில், 48 கோடி ரூபாய் மதிப்பில், 'கேத்லேப்' வசதி ஏற்படுத்த முடியும்.அமைச்சர் சுப்பிரமணியன்: தென்காசி மாவட்டத்திற்கு, அரசு மருத்துவ கல்லுாரி ஏற்படுத்த வேண்டும் என, முதல்வர் வலியுறுத்தி வருகிறார். மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு தான், 'கேத்லேப்' அமைக்க நிதி வழங்கப்படுகிறது. தென்காசியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அமைக்கும் போது, கேத்லேப் வசதி ஏற்படுத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.