விருதுநகர் : விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் அலுவலக கட்டடம் கட்டி
முடிக்கப்படாமலே, முழு தொகையும் வழங்கப்பட்டது தொடர்பாக, பொதுப்பணித் துறை
இன்ஜினியர்களிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விருதுநகர்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மேல்பகுதியில், துணை போக்குவரத்து
கமிஷனர் அலுவலகம் கட்ட, பொதுப் பணித்துறை மூலம், 44 லட்சத்து 51 ஆயிரம்
ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, மன்னார்நாயக்கன்பட்டி கான்ட்ராக்டர்
திருப்பதிராஜ் என்பவரால், 2010 டிசம்பர் 22ம் தேதி பணி துவக்கப்பட்டது. பணி
முழுமையாக முடிவு பெறாமலேயே, 2011 மார்ச் 25ல் முடிந்ததாகக் கூறி,
கான்ட்ராக்டருக்கு 3 தவணைகளில் 40 லட்சத்து 64 ஆயிரத்து 124 ரூபாய்க்கான
காசோலை வழங்கப்பட்டுள்ளது. பணி முடிந்ததாக, இன்ஜினியர்கள் வேல்முருகன்,
செல்வராஜ் , திருமால் கையெழுத்திட்டுள்ளனர். கண்காணிப்பு இன்ஜினியர்
ஞானசேகரனும் கையெழுத்திட்டு சான்று வழங்கி உள்ளார். ஆனால், பணி முழுமையாக
முடியவில்லை. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் வர, துணை
ஆய்வு குழு அதிகாரி சதியவாசகன் செல்வக்குமார் தலைமையில், போலீசார் அங்கு
சோதனையிட்டனர். அதில், மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஜினியர்கள்
வேல்முருகன், செல்வராஜ் ஆகியோரிடம் விசாரித்த போது,'கட்டுமானப் பொருட்கள்
விலை ஏற்றத்தால் கட்டி முடிக்கப்படவில்லை' என்றனர். முடிக்கப்படாத
கட்டடத்திற்கு காசோலை கொடுத்தது குறித்து கேட்ட போது, அவர்கள் பதில்
அளிக்கவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசார், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து
ஆராய, அங்கிருந்த சிமென்ட் கலவையையும் கைப்பற்றினர்.