உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஈ.டி., அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஈ.டி., அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

சென்னை:தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக, ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்கால தடை விதித்தனர். மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தடை விதித்த பின்னும், டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஸ்குமார், வரும் செப்., 17ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி