அழுகைக்கு ஆஸ்கர் விருது: அன்புமணி தந்தையை கொச்சைப்படுத்தியவர்: மகேஷ்
சென்னை, செப். 30--'பா.ம.க., தலைவர் அன்புமணி, நாகரிகமின்றி, கொச்சையாக பேசியுள்ளார்' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நேற்று பேட்டியளித்த அன்புமணி, 'கரூர் கூட்ட நெரிசலில், 41 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் சென்ற ஒரு அமைச்சர், தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு விரைவில், ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என, ஆஸ்கர் நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறேன். ஒரு துயர சம்பவத்தை வைத்து, அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த கூத்தை மக்கள் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டனர். மக்களை எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது' என, அமைச்சர் மகேஷை மறைமுகமாக விமர்சித்தார். அவருக்கு பதில் அளித்து, அமைச்சர் மகேஷ் வெளியிட்ட அறிக்கை:
பா.ம.க., தலைவர் அன்புமணி நாகரிகமின்றி, கொச்சையாக பேசியிருக்கிறார். கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் ஒன்பது பேர், பள்ளிக்கு செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதிலும் உள்ள, எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். மக்களில் ஒருவராக என்னை கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன். முதல்வர் ஸ்டாலின் சொல்வதுபோல், எந்த தலைவரும் தன் ஆதரவாளர் இறப்பதை விரும்பமாட்டார். தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள், மக்களின் பக்கம் நிற்கிறோம். ஆறுதல் தேடுகிறோம்; ஆறுதல் சொல்கிறோம். வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையை கூட, கொச்சைப்படுத்துபவரின் கருத்தை, இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.