செல்லப்பிராணி விற்பனை நிலையங்கள்: நல வாரியத்தில் பதிவு செய்வது கட்டாயம்
சென்னை: 'தமிழகத்தில் இயங்கி வரும் செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள் மற்றும் நாய்கள் இனப்பெருக்க நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் அறிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்களும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்புக்கு உட்பட்டவை. அதன்படி, பிராணிகள் வதை தடுப்பு விதிகளின் கீழ், தமிழகத்தில் இயங்கி வரும், அனைத்து நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிலையங்கள், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்திடம் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து, 2020ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஒரு சில செல்லப்பிராணிகள் விற்பனை நிலையங்கள்; நாய்கள் இனப்பெருக்கம் மற்றும் விற்பனை நிறுவனங்கள் தான், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளன. இதுவரை பதிவு செய்யாமல் நிறுவனங்களை நடத்துவோர், https://tnawb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 30க்குள் உறுப்பினர் செயலர், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள், நந்தனம், சென்னை - 600035 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அக்., 1க்கு பின் பதிவு செய்யாமல் நடத்தப்படும் நிறுவனங்கள் மீது, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.