உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க.,வின் மறுபிறப்பு; என் கடைசி யுத்தம்: சேலம் பொதுக்குழு குறித்து ராமதாஸ் உருக்கம்

பா.ம.க.,வின் மறுபிறப்பு; என் கடைசி யுத்தம்: சேலம் பொதுக்குழு குறித்து ராமதாஸ் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) நடக்கும் பொதுக்குழு, பா.ம.க.,வின் மறு பிறப்பு என்றும், தன் கடைசி யுத்தத்தில் பங்கேற்க வருமாறும், நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:பா.ம.க.,வில் நடக்கும் சண்டை, நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போர். கடந்த சில வாரங்களாக அன்புமணி கும்பலில் உள்ள சிலர், 'ராமதாசுக்கு வயதாகி விட்டது. புத்தி பேதலித்து விட்டது. சுயநினைவு இல்லாமல் பேசுகிறார்' என, என்னை அசிங்கப்படுத்துகின்றனர். அதை தாங்கிக் கொள்ளும் சக்தி என் இதயத்திற்கு உண்டு. இந்த கட்சி, எனக்கு யாரும் கொடுத்த சீதனம் அல்ல; பரம்பரையாக வந்த சொத்தும் அல்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என் வியர்வையை, ரத்தத்தை சிந்தி, நான் கட்டிய மக்கள் கோட்டைதான் பா.ம.க.இன்று என் கண் முன்னால், பா.ம.க., பலவீனமாக இருப்பதை கண்டு, பெற்ற வயிறு பற்றி எரிகிறது. எனது மகன் அன்புமணியை நம்பினேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு. இன்றுதான் கசப்பான உண்மை புரிகிறது. நான் செய்த தவறுகளில் ஒன்று - அன்புமணியை எம்.பி.,யாக்கியது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அன்புமணியின் ராஜ்யசபா வருகை, 30 சதவீதம் மட்டுமே. ராஜ்யசபா விவாதங்களில் ஏழு முறை மட்டுமே, பேசியுள்ளார். எம்.பி., பதவியை வீணடித்தது போலவே, கட்சித் தலைவரான பின், சரியாக களப் பணியாற்றவில்லை; தொண்டர்களை சந்திக்கவில்லை. ஒரு காலத்தில், 20 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த பா.ம.க., இன்று அங்கீகாரத்தை இழந்துள்ளது. கட்சியை காப்பாற்ற சில உறவுகளை, தள்ளி வைத்துள்ளேன். பா.ம.க., தலைமை பதவியே நீதிமன்றத்தில் உள்ளது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் வந்தால் கட்டடம் எப்படி நிற்கும்?சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் பொதுக்குழு, பா.ம.க.,வின் மறு பிறப்பு. வரும் சட்டசபை தேர்தலில், 25 தொகுதிகளில் வென்று, பா.ம.க., சின்னத்தையும், அங்கீகாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தந்திரங்களுக்கு ஏமாந்து போகாதீர்கள். பெற்ற தந்தைக்கு துரோகம் செய்பவர், கட்சியையும், மக்களையும் எப்படி காப்பாற்றுவார்? எனக்கு வயதாகி விட்டது. இதுதான் என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், கடைசி மூச்சு இருக்கும் வரை அறத்தோடு போராடுவேன். சேலத்தில் நடக்கும் பொதுக்குழுவுக்கு பா.ம.க., நிர்வாகிகள் அனைவரும் வர வேண்டும். இது பா.ம.க.,வை காப்பாற்ற கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு. அன்பும், உழைப்பும் என்றும் வெல்லும்; நாடகமும், சோம்போறித்தனமும் தோற்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை