உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலைப் பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வா நெடுஞ்சாலைத் துறையில் குமுறல்

சாலைப் பணியாளர்களுக்கு சாலை ஆய்வாளர் பதவி உயர்வா நெடுஞ்சாலைத் துறையில் குமுறல்

மதுரை:சாலைப் பணியாளர்களை பதவி உயர்வில் சாலை ஆய்வாளர்களாக நியமிப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையில் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில் முந்தைய தி.மு.க., ஆட்சியில் சாலைப் பணியாளர்கள் 14 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். பின்னர் அ.தி.மு.க., ஆட்சியில் ஜெ., முதல்வராக இருந்தபோது, மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக (41 மாதங்கள்) அவர்களை பணிநீக்கம் செய்திருந்தனர். அதன்பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தபின் அவர்கள் பணியில் தொடர அனுமதிக்கப்பட்டனர். பணி ஓய்வு, இறப்புக்குப் பின், தற்போது 4 ஆயிரம் பேர் இப்பணியில் உள்ளனர்.சாலைகளில் மேடு பள்ளங்களை நிரப்புதல், சாலையோரம் மரக்கிளைகளை அகற்றுதல் உட்பட ரோடுகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு அடுத்த நிலையில் பதவி உயர்வாக சாலை ஆய்வாளர் பணிகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சாலைகள் விரிவாக்கம் செய்யும்போது குறியீடு செய்வது, சாலைப் பணிகளில் மார்க்கிங், வரைவு, ட்ராப்ட் வரைதல் போன்ற பணிகளை சாலை ஆய்வாளர்கள் செய்வர்.இப்பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ.,யில் டிராப்ட்ஸ் மேன் சிவில் முடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தற்போது பதவி உயர்வில் சாலைப் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்திருப்பது குறித்து தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாநில பொருளாளர் வி.செல்வராஜன் கூறுவதாவது: சாலைப் பணியாளர்களாக 5ம் வகுப்பு தேர்ச்சி, உடல் தகுதி மட்டுமே கொண்டு துறையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த சாலை ஆய்வாளர் பணியிடம் வழங்குவது சரியானதல்ல. இவர்களால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சின்னங்களை அடையாளப்படுத்துவது, மைல், பர்லாங் கற்களில் குறியீடு செய்வது, எண்ணிடுவது, அடையாள சின்னமிடுவது போன்ற பணிகளை செய்ய முடியாது.கண்துடைப்பாக நடத்தப்படும் பிரீ பவுண்டேஷன் கோர்ஸ் முடித்து, இவர்களை பத்தாம் வகுப்பு தகுதியுள்ளவர்களாக்கி பதவி உயர்வு வழங்குகின்றனர். அதற்கு பதிலாக முறையாக பள்ளிக் கல்வியை முடித்தவர்கள் ஐ.டி.ஐ.,யில் அதற்கான தகுதியுடன் வந்தவர்களையே நியமிக்க வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலை பணியின் தரம் குறையும். இதுபோலத்தான் பொதுப்பணித் துறையில் ஒர்க் இன்ஸ்பெக்டர் என்ற பதவிக்கு பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ., முடித்தவர்களையே நியமிக்கின்றனர்சாலைப் பணியாளரையே பதவி உயர்வாக நியமிக்க வேண்டும் என்றாலும், குறிப்பிட்ட கால பணிமூப்பு உள்ளோருக்கு தகுதித் தேர்வு நடத்தி பதவி உயர்வு வழங்கலாம்.இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
அக் 24, 2024 07:24

கட்சிக்காரர்களை புறக்கடை வழியாக பணியில் சேர்த்ததோடு அவர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கிறார்கள். ஆளும் அதிகார வர்க்கத்தினருக்கு வாக்குகளை சேகரித்து ஆட்சியில் தொடர அரசு நிதியத்திலிருந்து செலவிடுகின்றனர்.


சமீபத்திய செய்தி