அரையாண்டு தேர்வுக்கு இடையே ஊரக திறனாய்வு தேர்வு; 9 ம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி
ஒட்டன்சத்திரம்; அரையாண்டு தேர்வு இடையே டிச.14 ல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என 9ம் வகுப்பு மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.2024---25 ம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.14 ல் திறனாய்வு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வு டிச. 9 முதல் டிச. 23 வரை நடைபெறுகிறது. அரையாண்டு தேர்வுக்கு இடையே டிச.14 ல் திறனாய்வு தேர்வு வருவதால் மாணவர்கள் எதை படிப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்பட்டால் கிராம மாணவர்கள் பயனடைவர். மேலும் பல ஆண்டுகளாக ஆண்டுக்கு ரூ.1000 தான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை மாதம் ரூ.1000 ஆக வழங்க வேண்டும். மாவட்டத்திற்கு 100 பயனாளிகள் என்பதை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.