புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில், சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம் கோலாகலமாக நடந்தது.சாய்பாபா சித்தி தினத்தை முன்னிட்டு, நேற்று புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் குல்வந்த் ஹாலில் பிரதானமாக காணப்படும், சாய்பாபாவின் மகா சமாதி, பல்வேறு விதமான மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.வேதமந்திரம் முழங்க துவங்கிய விழாவில், காலை முதல் இரவு வரை சாய் பஞ்சமிர்த கீர்த்தனைகள், இசை நிகழ்ச்சிகள் நடந்தன.ராஜ்குமார் பாரதி தலைமையில், கர்நாடக இசைக்கலைஞர்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பக்தர்கள் ஒன்றுகூடி, பக்தி மற்றும் அன்பை எதிரொலிக்கும் ஒரு இசை பிரசாதமான, சாய் பஞ்சரத்ன கிருதிகளை ஆத்மார்த்தமாக இசைத்தனர்.ஸ்ரீசத்யசாய்சேவா டிரஸ்ட் உறுப்பினர் எஸ்.எஸ். நாகானந்த், இந்த நாளின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார். ஒவ்வொரு அழைப்புக்கும், பகவான் எவ்வாறு பதிலளிப்பார் என, பகிர்ந்து கொண்டார்.அவரை தொடர்ந்து, ஸ்ரீ சத்யசாய்சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்ட்யா, ''பகவானின் வாழ்க்கை ஒரு தெய்வீக வரலாறு மட்டுமல்ல, எளிமை மற்றும் தன்னலமற்ற அன்பின் பாடம்,'' என, விளக்கினார். ஸ்ரீசத்யசாய் பிரேம பிரவாஹினி ரதங்கள் தொடங்கப்பட்டன.இது ஒவ்வொன்றும் சுவாமியின் புனித பாதுகைகளை தாங்கி, ''அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்ற அவரது செய்தியை பரப்ப, பாரதம் முழுதும் ஒரு தெய்வீக அன்பின் அலை பயணிக்க உள்ளது.இந்த அன்பின் ரதங்கள், 2026 நவம்பரில் சுவாமியின் நித்திய செய்தியுடன், எண்ணற்ற இதயங்களையும், வீடுகளையும் தொட்டுத் திரும்பும். தொடர்ந்து, தெய்வீக சொற்பொழிவு, பஜனைகள், மங்கள ஆரத்தி நடைபெற்றது. மாலை உத்தாரா உன்னிகிருஷ்ணன் குழுவினரின், பக்தி இசை நிகழ்ச்சி, பஜனைகள், மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.சத்ய சாய்பாபா உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம்
சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் அவரது உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான உத்தரவு சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது.ஸ்ரீ சத்ய சாய்பாபா ஆந்திர மாநிலம், புட்டபர்த்தியில் கடந்த 1926, நவ., 23ல் பிறந்தார். அவரது நினைவாக வெளியிடப்பட உள்ள 100 ரூபாய் நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோக சின்னம் பொறிக்கப்பட்டுஇருக்கும்.மறுபக்கத்தில் சத்ய சாய்பாபாவின் உருவம் பொறிக்கப்பட்டு, 1926 -- 2026 என்றும், 'சத்ய சாய்பாபாவின் ஜென்ம சதாப்தி' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.