ஆயுதபூஜை விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு மதுரைக்கு மெமு ரயில்
மதுரை: ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து 'மெமு' உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் - மதுரை 'மெமு' இன்று (செப்.,30) இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் கழிப்பறை வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயில், நாளை காலை 10:15 மணிக்கு மதுரை வரும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலுார், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சை, திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடு, சோழவந்தான் ஸ்டேஷன்களில் நிற்கும். இந்த ரயில், மெயின் லைனில் இயக்கப்படுவதால் 560 கி.மீ., அதிக துாரம் இயக்கப்படும் முதல் மெமுவாக கருதப்படும். தாம்பரம் - செங்கோட்டை இன்று மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், நாளை அதிகாலை 3:00 மணிக்கு செங்கோட்டை செல்லும். 13 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலுார், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லுார், தென்காசி ஸ்டேஷன்களில் நிற்கும். ஏற்கனவே செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில், திருநெல்வேலி வழியாக செல்வதால் ராஜபாளையம், சிவகாசி பகுதியினர் மதுரை, விருதுநகரில் இறங்கி பஸ்களில் பயணிக்கும் நிலை இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் (செப்.,18) செய்தி வெளியான நிலையில் மேற்கண்ட பகுதிகள் வழியாக முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.