பீஹாரில் ராகுல் நடைபயணம் ஆக.27ல் ஸ்டாலின் பங்கேற்பு
சென்னை:லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஆக.27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட, 'இண்டி' கூட்டணி தலைவர்கள், அதில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ''பீஹாரில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல், தன்னுடைய நடைபயணத்தில், கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களும் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். அதன் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று ஆக.27ல் ராகுலின் நடை பயணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்'' என தெரிவித்துள்ளார். 2022 செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ஜோடோ' யாத்திரையை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.