உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர்களின் உயிரை பறிக்கும் மன அழுத்தம்; ஓய்வுக்கும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம்

டாக்டர்களின் உயிரை பறிக்கும் மன அழுத்தம்; ஓய்வுக்கும், குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம்

கோவை: இதய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற தருணத்தில், வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த, 39 வயது டாக்டர் கிராட்லின் ராய், மாரடைப்பால் உயிரிழந்தது, மருத்துவத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலங்களில் மாரடைப்பால் இறக்கும் டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ சங்கம் புனே கிளை சார்பில் மேற்கொண்ட ஆய்வில், இந்திய மருத்துவர்களின் சராசரி 55-59 வயதாகவும், சக மனிதர்களுக்கு சராசரி ஆயுட்காலம் 69-72 வயதாகவும் உள்ளதை அறிய முடிகிறது. டாக்டர்களின் இறப்பு குறித்து, மத்திய - மாநில அரசுகள் ஆய்வு செய்து சரியான புள்ளிவிபரங்களை வைத்திருக்க வேண்டியதும், சரியான தீர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம். ஏனெனில், தனியார் மருத்துவமனைகளை காட்டிலும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் பணிச்சுமையால், மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கால்சியம் ஸ்கோரிங் பரிசோதனை கட்டாயம்

கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறைத்தலைவர் நம்பிராஜன்: உயிரிழந்த வேலுார் டாக்டர் கால்பந்து, ஓட்டப்பந்தய வீரராக இருந்தார். நம் கண்களுக்கு தெரியாமல், நமது ஆரோக்கியத்தை சீர்குலைத்து வருகிறது மனஅழுத்தம் எனும் பிரச்னை. சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்த பரிசோதனைகளை அவ்வப்போது செய்து கொள்வதை போல், சி.டி., கரோனரி ஆஞ்சியோகிராம் எனும் பரிசோதனையை, 30 வயதுக்கு மேல் செய்து கொள்ள வேண்டும். இப்பரிசோதனை வாயிலாக, ரத்தநாளங்களில் கால்சியம் படிமானம் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். 'கால்சியம் ஸ்கோரிங்' 100க்கு கீழ் இருந்தால், ஐந்தாண்டுகளுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவு. 400க்கு மேல் இருந்தால் ஐந்தாண்டுகளில் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம். அதை புரிந்துகொண்டு தீர்வை நோக்கி பயணிக்கலாம். உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்த அழுத்தம், சிகரெட், ஆல்கஹால் பயன்பாடு, பரம்பரையில் திடீர் இறப்பு உள்ளவர்கள், பிற இணை நோய் உள்ளவர்கள் பரிசோதனைகளை தவறாமல் செய்வது நல்லது. மனஅழுத்தம், துாக்கமின்மை, வேலைப்பளு காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. நம்மை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். குடும்பம், நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள் இந்திய மருத்துவ சங்க கோவை கிளை செயலாளர் டாக்டர் சீத்தாராம் கூறியதாவது: டாக்டர்கள் திடீர் இறப்புக்கு முக்கிய காரணம் மனஅழுத்தமே. மனஅழுத்தம் என்பது பல்வேறு தரப்பில் உள்ளது. நோயாளிகளை எதிர்கொள்ளும்போது, அறுவை சிகிச்சை என அடிக்கடி மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், 'அட்ரினலின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம். டாக்டர்கள் பணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஓய்வு எடுப்பதற்கும் கொடுக்க வேண்டும். வாரம் ஒரு நாள் விடுப்பை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் செலவிட வேண்டும். டாக்டர் என்பதால், உணர்வுகளை கட்டுப்படுத்தாமல், எதுவாக இருந்தாலும் பேசி விட வேண்டும். நோயாளிகள், மருத்துவமனை, மருந்து என்று இல்லாமல் மனதை வேறு இடங்கள், பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.

எப்போதும் சோகங்களை பார்க்கிறோம்; கேட்கிறோம்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதி கூறியதாவது: டாக்டர்கள் பணி உடல் உழைப்பு மட்டுமின்றி; மூளைக்கும் அதிக வேலை கொடுக்கும் பணி. அதிகம் படிப்பது, கடுமையான தேர்வுகளை எதிர்கொண்டே வருகின்றனர். நோயாளிகளின் பாதிப்புகளை கண்டறிவதும், அறுவை சிகிச்சையின்போது கவனம் செலுத்துவதும் எளிதான காரியம் அல்ல. காலை 7.30 மணிக்கு துவங்கினால், இடைவிடாமல் பணி இருந்துகொண்டே இருக்கும். மதிய இடைவேளை என்பது, பல நாட்கள் மாலையாகிவிடும். இரவு நேரத்திலும் அழைப்புகள் அடிக்கடி வரும். டாக்டர் பணி, 24 மணி நேர பணி; எப்போது அழைத்தாலும் தயாராக இருக்க வேண்டும். 'அட்ரினலின்' எனும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன், ஒரு சிங்கம் உங்களை துரத்தினால் இருக்கும் பதட்டமான சூழலில் சுரக்கும். இந்த ஹார்மோன் நோயாளிகள் திடீரென்று நிலைகுலைவது, சிகிச்சையின்போது ரத்தம் வெளியேறுவது, பிரசவத்தின்போது திடீர் சிக்கல் ஏற்படுவது, நோயாளிகளின் இறப்பின்போது உறவினர்கள் அழுது துடிப்பது போன்ற பல சமயங்களில், டாக்டர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும், 'அட்ரினலின்' ஹார்மோன் சுரக்கிறது. சரியான உணவு நேர மேலாண்மை இன்மை, துாக்கமின்மை, வேலைப்பளு, மனஅழுத்தம் ஆகியவை டாக்டர்களின் மாரடைப்புக்கு முக்கிய காரணம். தவிர, டாக்டர்கள் தினந்தோறும் அடுத்தவர்களின் கவலைகள், வலிகள், கண்ணீர் ஆகியவற்றை மட்டுமே எதிர்கொள்கின்றனர்; இதுவும் உளவியல் ரீதியான மனஅழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பணி, உணவு, துாக்கம் ஆகிய மூன்றில் நேர மேலாண்மை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா, மூச்சு பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். அனைத்து டாக்டர்களுக்கும் இவை தெரியும்; சற்று கவனம் செலுத்தினால் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

premprakash
ஆக 30, 2025 16:25

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள் என இருவேறு கருத்து கிடையாது. ஆனால் அவர்கள் தேவை இல்லாமல் blood , urine , ct mri scan, என பல டெஸ்டுகள் கொடுத்து ஏழைகளிடம் பணம் பிடுங்குகிறார்கள். கடவுள் கொடுத்த வரத்தை ஆடம்பர வாழ்க்கைக்கு செலவிட கூடாது...


ஆரூர் ரங்
ஆக 30, 2025 11:37

டாக்டர் பில்லைப் பார்த்தாலும் அதிர்ச்சி ஏற்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரியில் கோடிகளை செலவழித்து படித்த பின்பு போட்ட முதலை திரும்ப எடுக்க மட்டுமே இரவும் பகலும் பாடுபட வேண்டியுள்ளது. அந்தச் சுமை நோயாளிகளின் தலையிலும் விழுகிறது.


Natchimuthu Chithiraisamy
ஆக 30, 2025 11:22

மருத்துவம் படிப்பது நோய் அறிந்து கொள்வது வைத்தியம் செய்வது ஆனால் பெயரை உருவாக்கி மிக பெரிய கட்டிடம் கட்டி மக்கள் கூட்டத்தை கூட்டுவது மருத்துவம் அல்ல. அது மக்கள் பணத்தை கட்டிடமாக மாற்றுவது தான் தவிர மருத்துவம் அல்ல. மக்கள் வழியின்றி எந்த சிறிய மருத்துவ மனையையும் ...............................................


ஜெகதீசன்
ஆக 30, 2025 10:28

கால்சியம் ஸ்கோரிங் சோதனைக்காக CT ஸ்கேன் எடுப்பது அதிபயங்கர கதிர் வீச்சுக்கு ஆளாகனுமே. ஆகவே, ட்ரட் மில் டெஸ்ட் மூலம் இருதயம் மற்றும் நுரையீரல் திறனை தெரிந்து கொள்வதோடு மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளை மேற்கொள்வது தானே சரியாக இருக்கும்.


Natarajan Ramanathan
ஆக 30, 2025 09:54

மருத்துவர்கள் இப்படி இளம்வயதில் உயிரிழப்பது அநியாயம்தான்.


முக்கிய வீடியோ