ஆளும்கட்சிக்கு பணி செய்ய மட்டுமே தமிழக போலீஸ்: ஹிந்து முன்னணி
திருப்பூர்:'தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும், போலீஸ்துறையும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தன்னுடைய அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடக்கும் கொலைகள், பாலியல் துன்புறுத்தல், போதை தகராறு என, சட்ட விரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. ஈரோட்டில் பட்டப்பகலில் காரில் வந்தவரை வெட்டி கொலை செய்யும் காட்சி, தமிழகத்தில் நிம்மதியாக வாழ முடியாது என மக்கள் பயப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.டாஸ்மாக் கடைகள் தோறும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபை, முதல்வர் வீடு உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி, ஆளும்கட்சிக்கு பணி செய்வதை மட்டுமே போலீஸ் துறை செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடுவோரை தடுப்பதிலேயே போலீசின் முழு சக்தியும் செலவிடப்படுகிறது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதி பா.ஜ.,வை சேர்ந்த பாலசந்தர் முதல் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., நெல்லை ஜாகீர் உசைன் வரை, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என போலீசாரிடம் புகார் தெரிவித்த பின்னர் கொலை நடந்துள்ளது. நுண்ணறிவு பிரிவு போலீசார், ஒழுங்காக கடமையை செய்திருந்தால் இப்படிப்பட்ட கொலைகள் நடந்திருக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.