உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தில் தமிழகம் முதலிடம்

மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டத்தில் தமிழகம் முதலிடம்

சென்னை : 'எலக்ட்ரானிக்ஸ் சாதன பாகங்கள் உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததில் ஏழு திட்டங்களில், ஐந்து உடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார். அவரது அறிக்கை: எலக்ட்ரானிக்ஸ் சாதன பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு சலுகை வழங்குகிறது. இந்த சலுகை அளிப்பதற்காக, முதல் கட்ட சுற்றில் இதுவரை அனுமதி அளித்துள்ள ஏழு திட்டங்களில், ஐந்து திட்டங்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இவற்றின் வாயிலாக மொத்த முதலீட்டில், 77 சதவீத ஒப்புதலுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் சாதன பாகங்களுக்கான ஊக்குவிப்பு திட்டத்தில், 59,350 கோடி ரூபாய் ஆரம்ப முதலீடு இலக்காக கொண்டிருந்தாலும், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், 30 சதவீத முதலீடுகளை தமிழகம் பெறும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பெட்ரோலியத்தை விஞ்சுமா? இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பில், விரைவில் பெட்ரோலிய பொருட்களை பின்னுக்கு தள்ளி மின்னணு பொருட்கள் இரண்டாம் இடம் பிடிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையால், இந்தியாவின் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழலில், தற்போது மூன்றாம் இடத்தில் உள்ள மின்னணு பொருள் ஏற்றுமதி, பெட்ரோலிய பொருட்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ