வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் நாளை வலுப்பெறும் என எதிர்பார்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.அம்மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று காலையில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.அதற்கு அடுத்த இரண்டு தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக, தமிழகத்தில் நேற்று சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதேபோல, கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். நாளை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம். குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கன முதல் மிக கனமழையும், கடலுார். அரியலுார், சிவகங்கை புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாநகரின் சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் இன்று ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.