உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே குழப்பத்துக்கு காரணம்: பேராசிரியர் பாலகுருசாமி

பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே குழப்பத்துக்கு காரணம்: பேராசிரியர் பாலகுருசாமி

கோவை:'பல்கலைகளில் துணைவேந்தர்கள் இல்லாததே, குழப்பங்களுக்கு காரணம். தமிழக உயர் கல்வியின் நலன் கருதி, பல்கலைவேந்தரான கவர்னரும், இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கை கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும்' என, அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தரும், பேராசிரியருமான பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் பல்கலைதுணைவேந்தர்களை தேடும்குழுக்களில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பான விஷயத்தில், மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நீண்டகாலமாக, மோதல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களே இல்லை. அத்துடன் அடுத்த ஓரிரு மாதங்களில், அநேகமாக எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்படும்.பல பல்கலைகளில் முழுநேரப் பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டாளர்கள், நிதி அலுவலர்கள் இல்லை. துணைவேந்தர் பதவிகளும் இதர மூத்த அலுவலர்களும் இல்லாதது, பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை முடக்கி, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது, கல்வியாளர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களுக்கும் கவலை தரக்கூடியதாகும். இந்நிலை, மாணவர் நலனுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதுடன் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளின் தரத்திலும், மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சீராக இருப்பதில்லை. ஒரு வழக்கில், யு.ஜி.சி., வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, துணைவேந்தர் நியமனமே ரத்து செய்யப்பட்டுள்ளது.அதற்கு சில காலம் முன், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம், யு.ஜி.சி., வழிகாட்டு நெறிகளின்படி திருப்திகரமாக இல்லை என்று சுட்டிக் காட்டி, துணைவேந்தரை சென்னை உயர் நீதிமன்றம் பதவி நீக்கம் செய்தது.இதை எதிர்த்த மேல்முறையீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் சட்டத்தின்படியே, குறிப்பிட்ட நபர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார் எனச் சுட்டிக்காட்டி, நீக்கப்பட்டவரையே மீண்டும் நியமிக்க உத்தரவிட்டது.

முன்னோக்கி செல்லும் வழி

தமிழக அரசும், கவர்னரும் இந்த விஷயத்தில் இணக்கமான தீர்வு காண வேண்டிய தருணம் இது. துணைவேந்தர்களுக்கான தேடல் குழுக்கள், பல்கலைக்கழகங்களின் சட்டங்களின்படியே அமைக்கப்படுகின்றன. தற்போதுள்ள தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் சட்டங்களில், யு.ஜி.சி., பிரதிநிதியை, தேடல் குழுக்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என்பதற்கு இடமில்லை.அவ்வாறு இடம்பெறச் செய்வது, துணைவேந்தர் நியமனத்தில் பாரபட்சத்தையும், அரசியல் குறுக்கீட்டையும் கட்டுப்படுத்தும் என்பதால், அது வரவேற்கத் தக்கது தான். என்றாலும், அதை யாரும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது.அது மட்டுமின்றி, கல்வி தொடர்பானவை நீங்கலாக, யு.ஜி.சி., விதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டியவை அல்ல. துணைவேந்தர் தேடல் குழுவில், யு.ஜி.சி., பிரதிநிதியைச் சேர்ப்பதற்கான பிரிவை, பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் இடம்பெறச் செய்வதே, இதற்கு தீர்வு.அதுவரை, கவர்னர்தற்போதைய நடைமுறைகள், மரபுகளை ஏற்பதற்கு இசைய வேண்டும். துணைவேந்தர் நியமனங்களை விரைவுபடுத்த வேண்டும். அதுவே லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைத் துடைக்கும்.தமிழக உயர் கல்வியின் ஒட்டுமொத்த நலன் கருதி, பல்கலைவேந்தரான கவர்னரும்,இணைவேந்தர்களான அமைச்சர்களும் தங்களது மோதல் போக்கினைக் கைவிட்டு, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, பாலகுருசாமி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை