உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிப்பர் லாரி - கார் மோதல்; பெண் பலி

டிப்பர் லாரி - கார் மோதல்; பெண் பலி

குறிச்சி : கோவை, குனியமுத்தூரை அடுத்த, பி.கே.புதூர் அருகே, கார் மீது டிப்பர் லாரி மோதி கவிழ்ந்ததில், பெண் ஒருவர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர். மதுக்கரையை அடுத்த, எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலையில் எம்.டெக்., படித்து வந்தவர் ஜேன்மரியா, 23; விடுதியில் தங்கிப் படித்த இவர், படிப்பு முடிந்து நேற்று, சொந்த ஊரான கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள, தொடுப்புழாவுக்கு புறப்பட தயாரானார். இவரை அழைத்துச் செல்ல, தந்தை ஸ்காரியா, 58, தாயார் மேரி அகஸ்டின், 56, சகோதரர் கெவின்டோம், 20, உறவினர் ஜிஜோ, 28, ஆகியோர், காரில் வந்தனர். கல்லூரியிலிருந்து புறப்பட்ட அனைவரும், பொருட்கள் வாங்க கோயம்புத்தூருக்கு செல்ல முடிவு செய்தனர்.

கோவை - பாலக்காடு ரோட்டில், கோவைப்புதூர் பிரிவை அடுத்த இறக்கத்தில், பி.கே., புதூர் அருகே, எதிரே வந்த டிப்பர் லாரி, காரின் மீது மோதி கவிழ்ந்து, அமுக்கியது. விபத்தை கண்ட அருகிலிருந்தோர் மற்றும் லாரியை தொடர்ந்து வந்த, தமிழக காவல் துறையின் அதிவிரைவு மீட்பு படையினர், லாரியை அகற்றினர். படுகாயமடைந்த மேரி அகஸ்டின், ஸ்காரியா, ஜேன்மரியா ஆகியோர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்; சிகிச்சை பலனின்றி மேரி அகஸ்டின் இறந்தார். மேல் சிகிச்சைக்காக, மற்ற மூவரும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்காரியா மற்றும் மேரி அகஸ்டின் வங்கியில் பணிபுரிந்து வந்தது தெரிந்தது. விபத்து காரணமாக, கோவை - பாலக்காடு ரோட்டில், 12.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கும் மேல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை