போர் பதற்றம் தணிந்ததால் வடமாநிலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணியர் ஆர்வம்
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தணிந்துள்ளதால், வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல, பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.இதுகுறித்து, விமானம் மற்றும் ரயில் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலா தலமான பைசரன் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு, ரயில் மற்றும் விமான சுற்றுலா செல்ல பயணியர் தயங்கினர். 40,000க்கும் மேற்பட்டோர், முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணத்தையும் ரத்து செய்தனர். தற்போது, பதற்றம் தணிந்து நிலைமை சீராக உள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். அதன்படி, மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங், சிக்கிம் மாநிலம் கேங்டாக், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா, குலுமணாலிக்கு செல்ல, பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தில் இருந்து அஜந்தா, எல்லோரா, ஹைதராபாத், குவாலியர், அவுரங்காபாத் உள்ளிட்ட இடங்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.