உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனே உயர்த்துங்கள்! அன்புமணி கோரிக்கை

போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனே உயர்த்துங்கள்! அன்புமணி கோரிக்கை

சென்னை; போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உடனே உயர்த்த வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; 109 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோட்ட, மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நாளையும் தொடரவிருக்கிறது. தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி ஆகும். பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்க மறுப்பது பெரும் துரோகம் ஆகும். அதேபோல், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அவர்களுக்கு அக விலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் இப்போது வழங்கப்படும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட 60% அதிக ஓய்வூதியம் கிடைக்கும். போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் கூட அதை செயல்படுத்தாத தி.மு.க., அரசு, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது காட்டுகிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் ஒப்பிடும் போது, மின்சார வாரியம் அதிக நஷ்டத்திலும்,கடனிலும் இயங்குகிறது. ஆனால், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு முறையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட அவர்களுக்கான அகவிலைப்படியை 50 விழுக்காட்டிலிருந்து 53 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு இருக்கும் போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கக் கூடாது. அவர்களுக்கும் உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன், பணி ஓய்வு பெறும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ