விக்கிரவாண்டியில் த.வெ.க., முதல் மாநாடு அக்., 27ல் நடக்கும் என விஜய் அறிவிப்பு
சென்னை:'தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, அடுத்த மாதம் 27ம் தேதி நடக்க உள்ளது' என, அதன் தலைவர் விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.த.வெ.க., முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இம்மாதம் 23ம் தேதி நடத்த விஜய் முடிவு செய்திருந்தார். இடம் தேர்வு செய்யப்பட்டு, காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. காவல் துறை சார்பில், 21 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதில் அளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், மாநாடு ஒத்திவைக்கப்படும் என, தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில், அடுத்த மாதம் 27ம் தேதி அதே இடத்தில் மாநாடு நடக்கும் என, விஜய் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:த.வெ.க., கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கட்சியினர் எண்ணங்களுக்கு ஏற்ப, தமிழக மக்களின் பேரன்பு, பேராதரவுடன், நம் அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்து உள்ளது. மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில், புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய, நம் கட்சியின் தலைவர்கள், கொள்கைகள், கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் முதல் மாநில மாநாடு, அடுத்த மாதம் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடக்க உள்ளது.நம் வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப்போகும் கொள்கைகளையும், நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில், மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. களப்பணிகளும் துவக்கப்பட உள்ளன.இந்த மாநாட்டில் இருந்து, வலிமையான அரசியல் பெரும் பாதையை அமைப்போம். நம் முதல் மாநில மாநாட்டை, எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்த, தமிழக மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவையும் ஆசிகளையும், உரிமையுடன் வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.