மதுரை; மதுரை மாநகராட்சி விரிவாக்க வார்டுகளில் அரசியல் சிபாரிசு காரணமாக பெரும்பாலான அலுவலர்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் பரிசீலனையில் உள்ள 'மெகா டிரான்ஸ்பர்' நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மதுரை மாநகராட்சியில் 72 ஆக இருந்த வார்டுகள் 100 ஆக அதிகரிக்கப்பட்டது. பழைய 72 ஐ விட விரிவாக்கம் செய்த 28 வார்டுகளில் ஆயிரக்கணக்கான புதிய ரோடுகள், புதிய வணிக கட்டடங்கள், அபார்ட்மென்ட் பிளான் தொடர்பான திட்ட அனுமதி அதிகம்.முறைகேடு வெளிவரும்
இப்பணிகளால் இந்த 28 வார்டுகளில் நிதி 'வளம் கொழிக்கிறது'. இதனால் உதவிப் பொறியாளர்கள், டெக்னீஷியன்கள், சுகாதார ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள் என பலரும் விரிவாக்கம் செய்த 28 வார்டுகளில் இருந்து நகருக்குள் உள்ள 72 வார்டுகளுக்குள் பணிமாற்றம் பெறவிரும்புவதில்லை.அதனால் பழைய 72 வார்டுகளில் உள்ள அலுவலர்கள் குறிப்பிட்ட 28 வார்டுகளுக்கு மாற்றம் பெற முயற்சித்தாலும் முடியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் சிபாரிசு உள்ளது. விரிவாக்க வார்டுகளில் தற்போதுள்ள அலுவலர்களை மாற்றி அங்கு வேறு அலுவலர்கள் நியமிக்கப்பட்டால் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும் என மாநகராட்சி அலுவலர்களே ஆதங்கப்படுகின்றனர்.மாற்றத்தை தடுக்கின்றனர்
அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி அலுவலர்களின் 'மெகா இடமாற்றம்' நடவடிக்கை தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது. குறிப்பாக மண்டலம் 1, 4, 5 ஆகியவற்றில் அதிக விரிவாக்க வார்டுகள் இடம் பெற்றுள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ரோடு பணிகள் நடக்கின்றன. புதிய பாதாளசாக்கடை , குடிநீர் இணைப்பு திட்டம், ரியல் எஸ்டேட் தொழில், வணிக ரீதியிலான கட்டடங்களுக்கு அனுமதி என, வளம் கொழிக்கும் திட்டப் பணிகள் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன.இதனால் விரிவாக்க வார்டு அலுவலர்கள் அதை விட்டுச் செல்ல மறுக்கின்றனர். இடமாற்ற சூழல் வந்தால் அரசியல் பின்னணியுடன் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் ஆளும்கட்சி பிரமுகர்கள், கவுன்சிலர்களுக்காக பல 'அட்ஜெஸ்ட்மென்ட்'டுகளை செய்கின்றனர். எனவே, பரிசீலனையில் உள்ள 'மெகா இடமாற்றம்' திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அனைத்து வார்டுகளிலும் அலுவலர்களை இடமாற்றம் செய்தால் இம் முறைகேடுகள் வெளிவரும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.