சென்னை:“காப்புக்காட்டில் இருந்து, 3 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள பகுதிகளில் நடமாடும் காட்டுப் பன்றிகளை சுட, வனத் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.சட்டசபையில், அமைச்சர் பொன்முடி கூறியதாவது:காப்புக் காட்டில் இருந்து 1 கி.மீ., தொலைவு வரை, காட்டுப் பன்றிகளை சுட அனுமதி கிடையாது. அதே நேரத்தில் காப்புக் காட்டில் இருந்து, 1 கி.மீ., தொலைவு முதல், 3 கி.மீ., தொலைவு வரை உள்ள பகுதிகளில் நடமாடினால், காட்டுப் பன்றியை பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும்.வனப் பகுதியில் இருந்து, 3 கி.மீ., தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதிக்கு, காட்டுப் பன்றிகள் வந்தால், அவற்றை வனத் துறையினர் சுட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் சுட அதிகாரம் கேட்டுள்ளனர். பின்னர் பரிசீலிக்கப்படும்.காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் வனத்துறை எடுத்து வருகிறது.யானைகள் குறித்து பேசினர். அவற்றால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் வழியாக, 2.39 கோடி ரூபாய் செலவில், 46.5 கி.மீ., தொலைவுக்கு யானை புகா அகழி வெட்டப்பட்டுள்ளது. சூரிய மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன.மயில் தேசிய பறவை. இவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மனித - விலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்கு, தற்போது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
'மயில் முட்டைகளை உடைக்கலாம்!'
கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:பா.ம.க., - ஜி.கே.மணி: தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உட்பட, தமிழகம் முழுதும் பரவலாக யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், எலிகள், மயில் போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் துயரத்திற்கு ஆளாகின்றனர். அ.தி.மு.க., - செங்கோட்டையன்: காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அமைச்சர் விளக்கத்தில், காட்டுப் பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க இயலாது என, குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும். 3 கி.மீ., கடந்து வரும் காட்டுப் பன்றிகளை சுட்டு, ரசாயனம் ஊற்றி மண்ணில் புதைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்பதை, உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். மயில்கள் இனப்பெருக்கத்தை குறைக்க, அதன் முட்டைகளை சேகரித்து உடைத்து விட வேண்டும்.தி.மு.க., - செந்தில்குமார்: யானைகளை உளவியல் ரீதியாக, மக்கள் வாழ்விடங்களுக்கு வரவிடாமல் செய்ய முடியும். இதற்காக ஜான்சிங் உள்ளிட்டவர்கள் ஆய்வு நடத்தி உள்ளனர்.அவரது மாணவன் சிவகணேசன் என்பவரை, எங்கள் தொகுதிக்கு அழைத்து வந்து, யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்க, சிறப்பு படை அமைக்கப்பட்டது.அதேபோல் ஆராய்ச்சியாளர்களை அழைத்து வந்து, சிறப்பு படை அமைத்து, யானைகள் ஊருக்குள் வருவதை அரசு தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.