சென்னை: 'சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி இழப்பீட்டு தொ கை, 2.59 கோடி ரூபாயை, தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும்' என, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும், அதை அமல்படுத்தாத அரசின்செயலுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. பாலியல் வன்கொடுமை
சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க, சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. தமிழக-, கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், ஆண்களை சித்ரவதை செய்தும், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதை விசாரித்த, தேசிய மனித உரிமைகள் ஆணையம், பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு, 5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, தமிழக அரசுக்கு, 2007ல் உத்தரவிட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட 38 பேருக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், மீதமுள்ள, 3.79 கோடி ரூபாயை வழங்க, கடந்த ஆண்டு ஏப்ரலில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக தலைமை செயலர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப் பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ''பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரண்டாவது தவணையாக, ஒரு கோடியே, 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. ''பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில், அடிப்படை வசதிகள் உட்பட உள்கட்டமைப்புக்கு எட்டு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது,'' என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது: இழப்பீடு தொகை வழங்கினாலும், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை. பாக்கி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என, ஓராண்டுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அதை அமல்படுத்தவில்லை. இது, நீதிமன்ற அவமதிப்பு செயல். இதற்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது.
விசாரணை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாக்கி இழப்பீட்டு தொகையான, 2.59 கோடி ரூபாயை வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. தொழில் துறையினர், தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரலாமே தவிர, பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு எதிராக, அரசு வழக்கு தொடரலாமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகை, மக்களின் பணம்; அரசு பணம் அல்ல. மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என தெரிவித்து, ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையில், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை போக, மீதமுள்ள, 2.59 கோடி ரூபாயை உடனே விடுவிக்கும்படி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து, நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர், 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.