விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் வளைவுகளை நீக்கும் பணி துவக்கம் 130 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்க முடிவு
சென்னை:விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், வளைவுகளை நீக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில்வே விதிப்படி, 'குரூப் ஏ' வழித்தடத்தில் அதிகபட்சமாக மணிக்கு, 160 கி.மீ., வரையும், 'குரூப் பி' வழித்தடத்தில், 130 கி.மீ., வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள், மணிக்கு, 110 முதல் 130 கி.மீ., வரையிலான வேகத்தில் இயக்கப்படுகின்றன.திருச்சி - விழுப்புரம் - சென்னை வழித்தடத்தில், தற்போது மணிக்கு, 80 முதல், 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான வளைவுகள் இருப்பதாலும், பழைய பாலங்கள் மேம்படுத்தாமல் இருப்பதாலும், ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னையை இணைக்கும் முக்கிய பாதைகளில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.சென்னை சென்ட்ரல் - கூடூர், சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை தடத்தில் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் - கூடூர் தடத்தில் மணிக்கு, 145 கி.மீ., வேகத்தில் செல்ல சோதனை நடத்தப்பட்டு உள்ளது.இதேபோல, செங்கல்பட்டு - எழும்பூர் தடத்தில் மணிக்கு, 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கி வருகிறோம். ஆனால், திருச்சி - விழுப்புரம் தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக, 90 கி.மீ., வேகத்தில் தான் ரயில்கள் செல்கின்றன.எனவே, இந்த தடத்தில் ரயில்கள் மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், தேவையற்ற வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை புதுப்பிப்பது, சிக்னல் தொழில்நுட்பத்துடன் ரயில் பாதைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளை துவக்கி உள்ளோம்.அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த பணிகளை முடித்து, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்க உள்ளோம். இதனால், பயண நேரம், 30 முதல், 40 நிமிடங்கள் வரை குறையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.