ஆப்கனில் ஆற்றில் படகு கவிழ்ந்து 20 பேர் பலி
இஸ்லாமாபாத், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணம், முகமந்த் தாரா மாவட்டத்தில் காபூல் ஆறு பாய்கிறது. ஆற்றைச் சுற்றியுள்ள கிராமத்தினர், பிற கிராமங்கள் மற்றும் சந்தைகளுக்கு செல்வதற்கு, படகை பயன்படுத்தி பயணிக்கின்றனர்.இதே போல் நேற்று காலை குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் படகில் வெளியூர் புறப்பட்டனர். அதிக பாரம் காரணமாக நடு வழியில் படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில், ஐந்து பேர் மட்டுமே உயிர் தப்பினர். 20 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர்.உயிர் பிழைத்தவர்கள் தந்த தகவலின் அடிப்படையில், உள்ளூர் மக்களும், மீட்புப் படையினரும் சேர்ந்து ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், மூன்று குழந்தைகள் உட்பட, ஐந்து பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஆற்றில் காணாமல் போன அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.