உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலில் ஆப்கனில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

காபூல்: பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது. ஆப்கனில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானை குறி வைத்து அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல், ஆப்கன் தலிபான் அரசின் ஆதரவுடன் நடப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது-. மேலும், சமீபத்தில் ஆப்கனின் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் டி.டி.பி.,யின் முக்கிய தலைவரின் மகன் கொல்லப்பட்டார். இதையடுத்து, எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு ஆப்கன் கண்டனம் தெரிவித்தது. இதுமட்டுமின்றி, இருநாட்டு எல்லைக் கோடு பகுதியான டூரண்டோ பகுதியில் இருதரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றன. இந்நிலையில், ஆப்கனின் கிழக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு முழுதும் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குலில் ஒன்பது குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது. இத்தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அரசும், ராணுவமும் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நேற்று முன்தினம் காலை கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் உள்ள ராணுவ தலைமையகத்தை குறி வைத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

22 பயங்கரவாதிகள் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் வசிரிஸ்தான் வடக்கு எல்லையில் உள்ள பன்னு மாவட்டத்தில், ஆப்கனை சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து, அங்கு சென்ற ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறுகையில், ''பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த நாடும் பாகிஸ்தான் ராணுவத்துடன் துணை நிற்கிறது. ' 'நாட்டில் இருந்து அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் முற்றிலுமாக ஒழிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை