உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு

வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்க முடிவு

டாக்கா, வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படுபவரும், முன்னாள் பிரதமருமான, மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் இருந்து நீக்க, அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக கடந்த ஜூலையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரம் அடைந்து, தலைநகர் டாக்காவின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

போராட்டம்

போராட்டம் கையை மீறி போனதை அடுத்து, அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஆகஸ்டில் நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.இந்நிலையில், வங்கதேசத்தின் ரூபாய் நோட்டுகளில் இருந்து, முன்னாள் அதிபரும், முன்னாள் பிரதமரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படத்தை நீக்க, அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

நாணயங்களும் மாற்றம்

புதிதாக அச்சடிக்கப்படும் 20, 100, 500, 1,000 ரூபாய் நோட்டுகளில், ஷேக் முஜிபுர் படத்துக்கு பதிலாக, மதம் தொடர்புடைய கட்டமைப்புகள், வங்க பாரம்பரியம், மாணவர்களின் ஜூலை போராட்ட சித்திரங்கள் உள்ளிட்டவற்றை அச்சடிக்க, மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு அறிவுறுத்தி உள்ளது.இந்த புதிய ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆறு மாதங்களில் புழக்கத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புழக்கத்தில் உள்ள நாணயங்களையும் மாற்ற இடைக்கால அரசு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

புனரமைப்பு பணிகள் நிறுத்தம்

வட கிழக்கு மாநிலமான அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத்தின், இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில் அமைந்துள்ள குஷியாரா ஆற்றின் குறுக்கே, பழமையான ஹிந்து கோவில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததை அடுத்து சீரமைப்பு பணிக்காக, அசாம் பா.ஜ., அரசு, 3 லட்சம் ரூபாய் நிதி அளித்தது. கோவிலை புனரமைக்கும் பணிகள் நேற்று முன்தினம் துவங்கிய நிலையில், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினர், கோவிலுக்கு நேற்று வந்தனர். தங்கள் நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், சீரமைப்புப் பணியை நிறுத்தும்படி, நம் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கோவில் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

துாதருக்கு அழைப்பு

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள அந்நாட்டின் துாதரகம் முன் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில், வங்கதேச துாதரக அதிகாரி ஷிக்தர் முகமது அஷ்ரபுர் ரஹ்மானை, அவசர ஆலோசனைக்கு டாக்காவுக்கு வரும்படி அந்நாடு நேற்று உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை