உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சாம்பியன்ஸ் டிராபி: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அசத்தல்: இந்தியா அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அசத்தல்: இந்தியா அபார வெற்றி

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. இந்நிலையில் இன்று (மார்ச்.,02) 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவத்தி அணியில் சேர்க்கப்பட்டார்.

அதிர்ச்சி

துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 2 ரன்னிலும் , கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 11 ரன்கள் எடுத்து இருந்த போது, அவர் அடித்த பந்தை அந்தரத்தில் ஒற்றைக்கையில் பிடித்து அவுட் ஆக்கினார் நியூசி., வீரர் கெலென் பிலிப்ஸ். மொத்த ஸ்டேடியமும் அதிர்ச்சி அடைந்தது.இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் நிதானமாக விளையாடினார். ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து 79 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 23, ரவிந்திர ஜடேஜா 16 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முகமது ஷமி 5 ரன் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 250 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வருண் அபாரம்

இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 6 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார் மற்றொரு வீரர் வில் யங் 22 ரன்களில் வருண் சுழலில் சிக்கினார். குல்தீப் யாதவ் சுழலில் மிச்சல் 17 ரன்னிலும், ஜடேஜா பந்துவீச்சில் டாம் லாதம் 14 ரன்னிலும், வருண் சுழலில் பிலிப்ஸ் 12, பிரேஸ்வல் 2 ரன்னிடும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ரன்கள் சேர்த்த கேன் வில்லியம்ஸ் 81 ரன்களில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ரன்களை சேர்த்த கேப்டன் மிச்சல் சான்ட்னரை 28 ரன்னில் வருண் வீழ்த்தினார்.இறுதியில் 45.3 ஓவரில் நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அபாரமாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஆஸி., உடன் மோதல்

இந்த தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டி மார்ச் 4ம் தேதி துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Suresh
மார் 02, 2025 23:25

தமிழர்??? விட்டுருங்கடா ப்ளீஸ்


Jakumar Jakumar
மார் 02, 2025 22:48

வெள் பௌலிங் டீம் இந்தியா


Bye Pass
மார் 02, 2025 22:22

ஓங்கோல் திராவிடா மாதிரி பிதார் கர்நாடகா ...


Bye Pass
மார் 02, 2025 22:08

அவா் தானே ?


புதிய வீடியோ