கொரோனா தடுப்பூசி அளித்த மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருது
ரோசோகொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகா நாட்டுக்கு தடுப்பூசி வழங்கி உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.வட அமெரிக்க தீவு நாடான டொமினிகாவின் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா - டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் டொமினிகாவிற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவையும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவரது பங்கையும் இந்த விருது அங்கீகரிக்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தென் அமெரிக்க நாடான கயானாவில், வரும் 19 - 21 வரை நடக்கும் இந்தியா - கரீபிய சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி அங்கு செல்கிறார். அப்போது, டொமினிகா அதிபர் சில்வானி பர்டன், பிரதமர் மோடிக்கு விருது அளித்து கவுரவிப்பார் என கூறப்பட்டுள்ளது.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஏற்கனவே இந்த விருதை பெற்றுள்ளனர்.