இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஹவுதி பயங்கரவாதிகள்: 20 பேர் காயம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
டெல் அவிவ்: ஏமனில் இருந்து ஹவுதி பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்திய டிரோன் தாக்குதலில் 20 பேர் காயமடைந்தனர். 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்குவதற்காக இஸ்ரேல் விமானப்படையும், ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு இனப்படுகொலை நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, ஈரான் மற்றும் ஏமனில் செயல்படும் ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஹவுதி அமைப்பினருக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. இதனையடுத்து அந்த நாடுகள் மீதும் இஸ்ரேல் விமானப்படை மூலமும் ஏவுகணைகளை வீசியும் பதிலடி கொடுக்கிறது.இந்நிலையில், ஏமனில் இருந்து ஹவுதி பயங்கரவாதிகள் இஸ்ரேலின் எலியாட் நகரை குறி வைத்து டிரோன்கள் ஏவி தாக்குதல் நடத்தினர். இதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஹவுதிக்கள் ஏவிய சில டிரோன்கள் காலியிடங்களில் விழுந்தன. சில டிரோன்களை இஸ்ரேல் அழித்தது.