உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

ஜப்பானின் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி

டோக்கியோ: “ஜப்பானின் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜப்பான் மற்றும் சீனாவுக்கு, பிரதமர் மோடி நேற்று முன்தினம் புறப்பட்டார். முதலில், நேற்று ஜப்பானின் டோக்கியோ சென்ற பிரதமருக்கு, விமான நிலையத்தில், அந்நாட்டு அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் உயரதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை உற்சாகப்படுத்தும் வகையில், இந்திய - ஜப்பானிய கலைஞர்கள் பங்கேற்ற பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக கருதப்படும், 15வது இந்திய - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் அமைச்சர்களுடன் நடந்த கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமானதாகவும், உயர்ந்த நோக்கங்கள் கொண்டதாகவும் இருந்தது. இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் அவசியம். உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா - ஜப்பான் இணைந்து செயல்படும்.ஜப்பானுடனான பொருளாதார உறவு வலுவாக உள்ளது. சிறந்த உலகத்தை வடிவமைப்பதில் வலுவான பங்காளிகளாக நாங்கள் உள்ளோம். எங்களின் கூட்டாண்மை, ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். எங்கள் தொலைநோக்கு பார்வையின் மையமாக, முதலீடு, புதுமை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியன உள்ளன.அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பானின் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை இந்தியாவில் ஈர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.உயர் தொழில்நுட்ப துறையில், ஒத்துழைப்பை மேம்படுத்துவதே முக்கியமான இலக்காக உள்ளது. இதில், டிஜிட்டல் ஒத்துழைப்பு 2.0, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு திட்டங்கள் ஆகிவை எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. செமி கண்டக்டர் மற்றும் அரிய வகை தாது வளங்கள் ஆகியன எங்களின் முக்கிய திட்டங்களாக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா கூறுகையில், “இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கடற்சார் பாதுகாப்பு உட்பட உலக அமைதியை பேணுவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்த தலைமுறையினரின் சவால்களை சமாளிக்க, இரு தரப்பினரும் தங்கள் பலங்களை பயன்படுத்திக் கொள்ள உறுதிபூண்டோம்,” என்றார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - ஜப்பான் இடையே சந்திரயான் திட்டம், ஏ.ஜ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், அரியவகை கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 50,000 இந்தியர்கள் உட்பட 5 லட்சம் பேரை ஜப்பான் அனுப்புவதற்கான மனிதவள மேம்பாட்டு திட்டமும் கையெழுத்தானது. ஹைட்ரஜன் - அம்மோனியா ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு, கலாசார பாதுகாப்பு, கழிவு நீர் மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பத்தில் கல்வியாளர்களின் பங்கை வலுப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்பட்டன.

இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

முன்னதாக, டோக்கியோவில் நடந்த இந்தியா - ஜப்பான் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் முதலீடுகள் பெருகி கொண்டே வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி மற்றும் மாற்றத்தை அனைவரும் அறிவோம். இந்தியா தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு. இதற்கு காரணம் இந்தியாவில் நிலையான ஆட்சி, வெளிப்படைத்தன்மை, சீர்திருத்தம், மாற்றம், செயல்திறன் ஆகியவை தான். மிக விரைவில், நாங்கள் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவோம். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியத் துறைமுகங்களில் வர்த்தகம் இரட்டிப்பாகியுள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன், மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஜப்பானின் தொழில்நுட்பமும், இந்தியாவின் திறமையும் சேர்ந்தால் உலகளவில் தொழில்நுட்ப புரட்சியை நாம் ஏற்படுத்தலாம். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் இந்தியாவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொடர்பாக தொழில் துவங்குவோருக்கு இந்தியாவின் கதவு எப்போதும் திறந்திருக்கும். உலக நாடுகள் இந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஜப்பானிய தொழில் நிறுவனங்களே, இந்தியாவுக்கு வாருங்கள்; இந்தியாவில் தயாரியுங்கள். உலகத்துக்காக தயாரியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தாருமா பொம்மை பரிசு

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, தகசாகி குன்மாவில் உள்ள ஷோரின்சான் தாருமா - ஜி கோவிலின் தலைமை பூசாரி ரெவ் செய்ஷி ஹிரோஸால் ஒரு பாரம்பரிய தாருமா பொம்மையை பரிசாக அளித்தார். இந்த பரிசு, இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான நெருங்கிய நாகரீக மற்றும் ஆன்மிக தொடர்புகளை உறுதிப்படுத்தும் ஒரு சிறந்த அடையாளமாக கருதப்படுகிறது. தாருமா பொம்பை என்றால் என்ன? தாருமா பொம்பை என்பது, பவுத்த மதத்தின் ஜென் மரபை நிறுவியதாக கருதப்படும் இந்திய துறவி போதி தர்மரை மாதிரியாக கொண்ட ஒரு பாரம்பரிய ஜப்பானிய பொம்மை. ஜப்பானில், இவர் தாருமா தைஷி என அழைக்கப்படுகிறார். இப்பொம்மை முகம் மட்டும் கொண்ட, கை, கால்கள் இல்லாத வட்ட வடிவான சிகப்பு, வெற்று உருவம் போல் தோற்றமளிக்கும்.

சீன உறவு அவசியம்: மோடி

“உலக பொருளாதாரத்தில் தற்போதைய ஏற்ற, இறக்கங்களை கருத்தில் கொண்டு, இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும் உலக அரங்கில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்”, என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானிய நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், மோடி மேலும் தெரிவித்திருப்பதாவது: இரு பெரிய அண்டை நாடுகளாகவும், முக்கிய பொருளாதார நாடுகளாகவும் உள்ள இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் நட்பு ரீதியிலான உறவு, பிராந்தியம் மற்றும் உலக அமைதி மற்றும் செழிப்புக்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை