உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

நியூயார்க்:''ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதனால்தான் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கை மற்ற நாடுகளுக்கும் தொடரும்,'' என, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைன் உடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு இரண்டாம் நிலை தடை எனப்படும், கூடுதல் வரிகளை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியுடன், கூடுதலாக, 25 சதவீத வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். சீனா, துருக்கி போன்ற பிற நாடுகள் மீது அத்தகைய நடவடிக்கை பாயவில்லை. சீனாவுக்கு 30 சதவீத வரியும், துருக்கிக்கு 15 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'ரஷ்யாவிலிருந்து சீனா உட்பட பல்வேறு நாடுகள் எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், இந்தியாவிற்கு மட்டும் அதிக வரி விதித்தது ஏன்' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''வரி விதித்து எட்டு மணி நேரம் மட்டுமே ஆகிறது. எனவே, அடுத்ததாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம். நீங்கள் நிறைய பார்க்கப் போகிறீர்கள்,'' என்று பதிலளித்தார். மேலும், ''சீனாவுக்கு அடுத்ததாக, இந்தியா அதிகளவு கொள்முதல் செய்வதால் அதன் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது,'' என, அவர் கூறியுள்ளார். 'உக்ரைன் - ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை எட்டினால், இந்தியா மீதான கூடுதல் வரிகளை கைவிடுவீர்களா' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ''அதை நாங்கள் பின்னர் தீர்மானிப்போம். ஆனால் இப்போது, இந்தியா 50 சதவீத வரியை செலுத்தும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை