பாரிஸ்: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு, ஆஸ்திரேலியா தலைமையில் இந்தியா, சிங்கப்பூர் உட்பட 25 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், உலக வர்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்தனர். இதில் பங்கேற்ற உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா, பியுஷ் கோயலை சந்தித்து பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:உலக வர்த்தக அமைப்பின் 14வது அமைச்சரவை மாநாடு, மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் அடுத்தாண்டு மார்ச் மாதம் 26 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா தலைமைத்துவத்துடன் செயல்பட விரும்புகிறோம். சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, வளரும் நாடுகளுக்கான வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழியேற்படுத்தி தர வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் 166 உறுப்பினர்களில் 126 நாடுகள், வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில், 90 வளர்ந்து வரும் நாடுகள் உள்ளடங்கும்; இந்தியாவும் ஆதரவளிப்பது சிறப்பானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கையெழுத்திட இந்தியா மறுப்பு
சீனாவால் முன்மொழியப்பட்டுள்ள வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்பு ஒப்பந்தத்தை, 100க்கும் மேற்பட்ட நாடுகள் முன்மொழிந்துள்ளன. முதலீட்டு ஒப்புதல்கள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை எளிமையாக்குவதும்; விரைவாக்குவதும் இதன் முக்கிய நோக்கம். உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்குள் இந்த ஒப்பந்தத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையெழுத்திடும் நாடுகள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலீட்டில் தலையிட உலக வர்த்தக அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த ஒப்பந்தம் அமைப்பின் வடிவத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி, இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது.
கோயல் வலியுறுத்தல்
சில நாடுகள், சந்தை அணுகலை மறுக்க பயன்படுத்தும் வரி அல்லாத பிற தடைகளை நிவர்த்தி செய்யவும், அரசு தலையீடு அதிகம் உள்ள பொருளாதாரங்களால் ஏற்படும் வர்த்தக சிதைவுகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், உலக வர்த்தக அமைப்பில் வலுவான தீர்வு நடைமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தியதாக, கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.