உள்ளூர் செய்திகள்

பகவான் ஸ்ரீரமண மகரிஷி ஆராதனை தினம்

புதுதில்லி: பகவான் ரமண மகரிஷியின் 75வது ஆராதனை லோதி சாலையில் உள்ள ரமண கேந்திராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாலை 5.00 மணிக்கு, குரு வந்தனம், கணபதி பூஜை மற்றும் ஸ்வஸ்தி வசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதையடுத்து, கலச ஸ்தாபனம், ருத்ர நமகம், சமகம், ஸ்ரீ ரமண அஷ்டோத்திர பூஜை , மற்றும் தைத்திரீய உபநிடதம் பாராயணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, எம்.எஸ்.ஜெயந்தி ஐயர் மற்றும் குழுவினர் ரமண பாத பஞ்சரத்னத்தை இசை வழியில் வழங்கினர். ஜி. ராகவேந்திரா பிரசாத் (வயலின்) மற்றும் அச்சுதன் (மிருதங்கம்) பக்க வாத்தியம் வாசித்தனர். திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம் பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி இயற்கையோடு கலந்த தினத்தன்று. (இரவு 8.47 மணி). இத்தருணத்தில், ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பக்தர்கள் அக்ஷர மணமாலை பாடி கோஷமிட்டனர். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75வது ஆராதனையை (மகா நிர்வாண தினம்) அனுசரிக்கும் அனைத்து பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர். பிறகு ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தம்மைக் கண்டறிவதற்காகத் தனக்குள்ளேயே ஆழ்ந்து வருபவனே தனக்குப் பிரியமானவன் என்று பகவான் கூறியுள்ளார். பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் உண்மையான பக்தராக இருக்க முயற்சிப்போம், அவரில் நிலைத்திருப்போம். - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !