உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  ஹைடெக் கிரிக்கெட் ஸ்டேடியம் விரைவில் பணிகள் துவக்கம்

 ஹைடெக் கிரிக்கெட் ஸ்டேடியம் விரைவில் பணிகள் துவக்கம்

- நமது நிருபர் - பெங்களூரில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடிய பணிகள் விரைவில் துவங்கவுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெங்களூரு நகரில் உள்ள, சின்னச்சாமி விளையாட்டு அரங்கத்தில், சரியான அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கு மாற்றாக, அனைத்து வசதிகளும் கொண்ட விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது, கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின், நீண்ட கோரிக்கையாக இருந்தது. குறிப்பாக, சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், அசம்பாவிதம் ஏற்பட்டு, 11 பேர் பலியானதற்கு பின், இந்த கோரிக்கை வலுத்தது. தற்போது அவர்களின் ஆசை நிறைவேறுகிறது. அதி நவீன வசதிகள் கொண்ட, ஹைடெக் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளது. பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், சூர்யநகர் நான்காவது ஸ்டேஜில், சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். கடந்த மே 23ம் தேதியன்று, அன்றைய முதல்வர் சித்தாமையா அடிக்கல் நாட்டினார். இங்கு, 1,241 கோடி ரூபாய் செலவில், பணிகள் நடக்கவுள்ளன. விளையாட்டு அரங்கம் கட்ட, டெண்டர் அழைக்கப்பட்டது. இதில், ஜெ குமார் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், என்.சி.சி., லிமிடெட் என, இரண்டு பெரிய நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் குறைந்த தொகையை பதிவு செய்த, ஜெ குமார் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு, டெண்டர் கிடைத்துள்ளது. அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்ததும், விரைவில் அந்த நிறுவனம் பணிகளை துவக்கும். கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க, மாநில அரசு தனியாக நிதியுதவி வழங்கவில்லை. பதிலாக, கர்நாடக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடுகள், மனைகள் விற்றதில் கிடைத்த தொகையை பயன்படுத்தி, பணிகள் நடத்தப்படுகின்றன. இந்த விளையாட்டு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டால், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்துக்கு பின், நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கமாக இது இருக்கும். கர்நாடக வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்துக்காக, 75 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. வீட்டு வசதி வாரியம், மேம்பாட்டு பணிகளுக்காக, 401 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இதில் ஆனேக்கல்லின், இன்ட்லவாடி கிராமத்தில் உள்ள, 53.14 ஏக்கர் நிலம் விளையாட்டு அரங்கத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. தேவையான நிலம் வழங்கப்பட்ட பின், அடுத்த இரண்டு மாதங்களில் பணிகள் துவக்கப்படும். கே.ஹெச்.பி., சார்பில் இந்த விளையாட்டு அரங்கம் கட்டப்படுகிறது. பணிகளை முடிக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு, மூன்று ஆண்டுகள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பணிகளை துவங்குவதற்கு முன், சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறுவதும், ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை