உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  நாக்கை நாட்டியமாட வைக்கும் வாழைப்பூ பக்கோடா

 நாக்கை நாட்டியமாட வைக்கும் வாழைப்பூ பக்கோடா

- நமது நிருபர்-: வாழை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து, செய்யக்கூடிய அனைத்து உணவுகளுமே உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால், நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, சிறுநீரக கற்கள் பிரச்னையில் இருந்து விடுபடலாம். இதுபோன்ற, அதிக நன்மையுடைய வாழைப்பூவை வைத்து கூட்டு செய்வதற்கு பதிலாக, 'வாழைப்பூ பக்கோடா' செய்து பாருங்கள். இதன் சுவை, வழக்கமாக செய்யும் வெங்காய பக்கோடாவை விட சிறப்பாக இருக்கும். தேவையான பொருட்கள்  வாழைப்பூ 1  மிளகாய் துாள் 1 டீஸ்பூன்  மஞ்சள் துாள் 1/2 டீஸ்பூன்  சோள மாவு 1 டீஸ்பூன்  கடலை மாவு 1 டீஸ்பூன்  அரிசி மாவு 1 டீஸ்பூன்  இஞ்சி, பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்  மிளகு துாள் 1/2 டீஸ்பூன்  உப்பு தேவையான அளவு  எண்ணெய் தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய் துாள், மஞ்சள் துாள், மிளகு துாள், இஞ்சி, பூண்டு விழுது, கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும். பின், ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பூவை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் போட வேண்டும். வாழைப்பூ நன்கு பொறிய வேண்டும். பக்கோடா பதத்திற்கு வந்தவுடன், அதை எண்ணெயில் இருந்து எடுக்க வேண்டும். அவ்வளவு தான் வாழைப்பூ பக்கோடா தயார். மாலை வேளையில் செய்து சாப்பிடுவது சிறப்பாக இருக்கும். பக்கோடாவுக்கு, 'தக்காளி சாஸ்' தொட்டு சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !