உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / பானுவாசர ஸ்பெஷல் / வீணாகும் உணவை ஆதரவற்றோருக்கு வழங்கும் தம்பதி

வீணாகும் உணவை ஆதரவற்றோருக்கு வழங்கும் தம்பதி

பசித்தவர்களுக்கு மட்டுமே, உணவின் மகத்துவம் தெரியும். மற்றவர்களின் பசியை உணர முடியும். உணவை வீணாக்க விரும்ப மாட்டார்கள். பசியை உணர்ந்த ஏழை தம்பதி கரியப்பா - சுனந்தா ஷிரஹட்டி மற்றவர்களின் பசியை போக்கும், புனிதமான பணியை செய்கின்றனர். பல்வேறு திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பெருமளவில் உணவு மிச்சமாகும். இதை குப்பையில் கொட்டி வீணாக்குவர். இப்படி வீணாகும் உணவை, ஹூப்பள்ளியை சேர்ந்த கரியப்பாவும், அவரது மனைவி சுனந்தா ஷிரஹட்டியும் சேகரித்து, ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி பசியாற்றுகின்றனர். இதை ஒரு சேவையாக செய்கின்றனர். சேவை ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் இத்தம்பதி, பல நாட்கள் உணவின்றி பட்டினியாக உறங்கியுள்ளனர். இது போன்று மற்றவர்களும் பசியால் வாடக்கூடாது என்ற, நல்ல நோக்கில், நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று, உணவை சேகரித்து, ஆதரவற்ற மக்களுக்கு வழங்குகின்றனர். இவர்களின் சேவை மனப்பான்மையை கவனித்த பலரும், நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் உணவை, தம்பதியிடம் ஒப்படைக்கின்றனர். இதற்கு முன்பு ஆட்டோவில், உணவை சேகரித்தனர். இதை பார்த்த முன்னாள் ராணுவ வீரர், தன் பழைய ஆம்னி வேனை, தம்பதிக்கு இலவசமாக கொடுத்திருந்தார். இந்த வேன் தம்பதிக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் அந்த வேன் பழுதடைந்து, சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, கரியப்பா கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக உணவு சேகரித்து, மற்றவருக்கு வழங்கி அவர்களின் பசியை போக்கும் சேவையை செய்து வருகிறோம். தினமும் ஏதாவது ஒரு பகுதியில், எங்களுக்கு உணவு கிடைக்கிறது. சிலர் நிகழ்ச்சிகளுக்கு தாங்களே உணவு தயாரித்தோ அல்லது ஹோட்டலில் வாங்கியோ, எங்களிடம் கொடுக்கின்றனர். இதை நாங்கள் வீதி, வீதியாக கொண்டு சென்று பசித்தவர்களுக்கு வழங்குகிறோம். மனைவி உதவி இது போன்று கிடைக்கும் உணவுக்காகவே, பல குடும்பங்கள் காத்திருக்கின்றன. அந்தந்த பகுதிகளுக்கு சென்று, இத்தகைய குடும்பங்களை அடையாளம் கண்டு, உணவு வழங்குகிறோம். நான் பணி நிமித்தமாக வெளியே சென்றால், உணவு சேகரித்து வழங்கும் பணியை, என் மனைவி செய்கிறார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உணவு மிச்சமானால், எங்களிடம் கொடுக்கின்றனர். இதை சேகரித்து ஆதரவற்றோர், ஏழைகளுக்கு வழங்கும் நோக்கில், ஒரு டிரஸ்ட் அமைத்துள்ளோம். தொலைபேசி எண் உள்ளது. அதில் தொடர்பு கொண்டு கூறினால், நாங்களே சென்று உணவை பெற்றுக் கொள்கிறோம். உணவை சிறு, சிறு பொட்டலமாக்குகிறோம். இதை வழி நெடுகிலும் உள்ள ஏழைகளுக்கு வழங்குகிறோம். யாரும் பசியுடன் அவதிப்படக்கூடாது என்ற, நல்ல நோக்கில் இதை சேவையாக செய்கிறோம். நிகழ்ச்சிகளில் உணவு மிச்சமானால், அதை மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், எப்படி கொடுப்பது என்பது தெரியாமல் குப்பையில் போடுவர். ஹூப்பள்ளி நகரில் எந்த இடத்தில் இருந்தாலும், போன் செய்தால் நாங்களே அங்கு சென்று பெற்றுக் கொள்கிறோம். ஏழைகளுக்கு உணவு நாங்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள்; பசியை உணர்ந்துள்ளோம். பசியை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே, உணவின் முக்கியத்துவம் தெரியும். சமுதாயத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பது, எங்களின் விருப்பம். இரண்டு, மூன்று ஆண்டுகளாக மற்றவர்களிடம் உணவு சேகரித்து தருகிறோம். அதற்கு முன்பு எங்கள் சொந்த செலவில் வீட்டில் எங்களால் முடிந்த உணவு தயாரித்து, ஏழைகளுக்கு வழங்கினோம். திருமணம், நிகழ்ச்சிகளில் பெருமளவில் உணவு வீணாவதை பார்த்து, அதை மற்றவருக்கு வழங்கி பசியாற்றுவதை துவக்கினோம். தானமாக கிடைத்த வாகனம் பழுதடைந்துள்ளது. தொலைவில் இருந்து உணவு கொண்டு சென்று, ஏழைகளுக்கு கொடுக்க முடியவில்லை. உணவு கொண்டு செல்லும்படி அதிகமாக அழைப்பு வருகிறது. ஆனால் வாகனம் இல்லாத காரணத்தால், எங்களால் செல்ல முடியவில்லை. புதிதாக வாகனம் வாங்கும் அளவுக்கு, எங்களுக்கு பண வசதி இல்லை. மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள் சேர்ந்து எங்களுக்கு ஒரு வாகனம் வாங்கிக் கொடுத்தால், எங்கள் சேவைக்கு தோள் கொடுத்ததாக இருக்கும். ஆர்வம் உள்ளவர்கள் 93801 36683 என்ற மொபைலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை