இன்றைய இளம் தலைமுறையினர் பொதுவாக சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று பொடுகு தொல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், ஹார்மோன் மாறுபாடு, உணவு மாற்றம், வறட்சி, முறையற்ற முடி பராமரிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சிக்கரமான விளம்பரங்கள் மூலம் இளசுகளை கவர்ந்து அவற்றிக்கு நிரந்தரமாக தீர்வளிக்க முடியாத பிரச்னையாக அதை மாற்றுக்கின்றன. தலையில் பொடுகு வருவது இயல்பு என்றாலும், அதை தடுக்காவிட்டால் முடி கொட்டுதல், உடைதல், சோரியாசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இந்த பிரச்னையை இயற்கையை முறையில் தீர்க்க பல்வேறு வழிகள் உள்ளது. அவை குறித்தும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.தேங்காய் எண்ணெய்
முடி பராமரிப்பில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு எதுவும் கிடையாது. பாரம்பரிய முறைப்படி செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே முடி அடர்த்தியாக வளர்வதோடு, மேற்கூறிய பிரச்னைகள் எதுவும் வராது. இதை பயன்படுத்த தவறி பொடுகு தொல்லையால் அவதிப்படுவோர்கள், தேங்காய் எண்ணெய் உடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு தேய்த்து அலசினால் பொடுகு தொல்லை நீங்கும்.
தயிர்
தயிரை தலையில் தேய்த்து சுமார் 1மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஷாம்பு தேய்த்து குளித்தால், வெப்பம் குறைவதோடு, முடி பளபளப்பாகும். பொடுகு தொல்லையும் மறையும். மேலும் சைனஸ், ஒற்றை தலைவலி உள்ளவர்கள் தயிரை பயன்படுத்த வேண்டாம்.
வெந்தயம்
அஞ்சறைப்பெட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் வெந்தயத்தை ஊறவைத்து தண்ணீர் விட்டு அரைத்து தலையில் தடவி, சுமார் அரை மணிநேரம் ஊற வைத்து, பின்னர் குளித்தால், தலை குளிர்ச்சியாவதோடு, முடி அடர்த்தியாக வளரும். பொடுகு தொல்லை இருக்காது.
சின்ன வெங்காயம்
சாம்பார் வைக்க பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தை பேஸ்ட் போல் அரைத்து தலையில் தடவி சுமார் 30நிமிடங்கள் கழித்து குளித்தால், தலையில் உள்ள அழுக்கு, பொடுகு நீங்கும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
வேப்பிலை
இந்திய இயற்கை மருத்துவத்தில் முதலிடத்தில் உள்ள வேப்பிலையை, ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து தலையில் தடவி சுமார் 10நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். இதில் உள்ள கசப்பு தன்மை தலையில் உள்ள பாக்ட்ரியா மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து விடும்.
மருதாணி இலை
உடம்பிற்கு குளிர்ச்சியை தரும் மருதாணி இலைகள் ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து, அதில் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலை முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். சுமார் 2மணி நேரம் ஊறவைத்த பிறகு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடி நிறம் மாறாது. குறிப்பாக சைனஸ், ஒற்றை தலைவலி, சளிப்பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.