திண்டுக்கல்லில் சிக்கிய லோடுமேன் | sexual harasshment of women | arrest of loduman | RP | dindigul
ஈரோடு மாவட்டம் பழைய கரூர் ரோட்டை சேர்ந்த 26 வயது பெண் துாத்துக்குடியில் தனியார் அரசு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படிக்கிறார். உடல் நிலை சரியில்லாத தந்தையை பார்க்க ஓகா ரயில் பொதுப்பெட்டியில் ஏறி ஈரோடு சென்றார். விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றது. அந்த ரயிலில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த லோடு மேன் சதீஷ்குமார் பொதுப்பெட்டியில் ஏறினார். மது போதையில் இருந்த சதீஷ்குமார், இளம் பெண் அருகே அமர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அந்த பெண் சக பயணிகள் உதவியோடு போலீஸ் உதவி எண் 139 ஐ தொடர்பு கொண்டு புகாரளித்தார். தொடர்ந்து உதவி மையம் மூலம் திண்டுக்கல் ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையிலான போலீசார் அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தனர். ஓகா ரயிலில் ஆய்வு செய்து இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை கைது செய்து நையப்புடைத்தனர். சில நாட்களுக்கு முன் ரயிலில் ஆந்திரா சென்ற கர்ப்பிணிக்கு வேலுார் அருகே சிலர் பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கிழே தள்ளி விட்ட கொடுமை இன்னும் அடங்காத நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இளம்பெண்ணுக்கு ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து லோடுமேன் கைது செய்யப்பட்டிருப்பது ரயிலில் பயணிக்கும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.