இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவிக்கும் பரபரப்பு காட்சி israel vs hamas | israeli hostages | gaza ceasefire
இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே 15 மாதங்களாக நடந்து வந்த தீவிர போர் நேற்று முடிவுக்கு வந்தது. 2023 அக்டோபர் 7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்த அப்பாவி மக்களை குருவி சுடுவது போல் சுட்டுத்தள்ளினர். இந்த கொடூர தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். அதுமட்டும் இன்றி 251 பேரை பிணைக்கைதிகளாகவும் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். அவர்கள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் துவங்கியது. இஸ்ரேல் தாக்குதலில் காசாவின் பல பகுதிகள் சிதைக்கப்பட்டன. மொத்தம் 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தான் போரை நிறுத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தமும் தயார் ஆனது. அதன்படி, 42 நாட்கள் இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்த காலத்தில் தங்கள் வசம் எஞ்சி இருந்த 94 பிணைக்கைதிகளில் 33 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் படிப்படியாக விடுவிக்க வேண்டும். பதிலுக்கு காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட வேண்டும். அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்களை கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்க வேண்டும்.