இந்தியரின் உணவகத்தில் வேலை பார்த்த 7 பேர் கைது | UK Targets Indian Restaurants | Trump | Immigration
அமெரிக்கா வழியில் இங்கிலாந்து இந்தியரின் ஓட்டல்களில் ரெய்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியறேிய பிறநாட்டவரை வெளியேற்றும் அதிரடி நடவடிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர கவனம் செலுத்துகிறார். அதே பாணியை பின்பற்றி, இங்கிலாந்தில் சட்ட விரோதமாக குடியேறி வேலை செய்யும் வெளிநாட்டவர்களைக் கண்டறியும் நாடு தழுவிய சோதனையில் இங்கிலாந்து அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனைகளின்போது சிக்கும் நபர்களை கைது செய்து அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வருகின்றது. அந்த வகையில், இந்திய உணவகங்கள், கடைகள், பார்கள், கார் கழுவும் இடங்களில் இங்கிலாந்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். வடக்கு இங்கிலாந்தின் ஹம்பர்சைட் நகரத்தில் ஒரு இந்திய உணவகத்தில் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்த 7 பேரை பிரிட்டன் போலீசார் கைது செய்தனர். 4 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கியர் ஸ்டாமர் தலைமையிலான பிரிட்டன் அரசு சட்ட விரோதமாக குடியேறி வசிப்பவர்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற உள்ள நிலையில், நாடு முழுவதும் சோதனைகள் நடத்தப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் யெவெட் கூப்பர் கூறியதாவது இங்கிலாந்தின் குடியேற்ற விதிகள் மதிக்கப்பட வேண்டும். சட்ட விரோதமாக வருபவர்களுக்கு வேலை தந்து அவர்களை சுரண்டும் போக்கு நீண்டகாலமாக இங்கு இருந்து வருகிறது. நிறைய பேர் உயிரை பணயம் வைத்து நீர் நிலைகளைக் கடந்து இங்கிலாந்து வந்து வேலை செய்கின்றனர். அவர்கள் எங்கள் நாட்டு குடியேற்ற விதிகளை அவமதிக்கின்றனர். அத்துடன் பொருளாதாரத்துக்கும் கேடு விளைவிக்கின்றனர் என யெவெட் கூப்பர் கூறினார். சட்ட விரோதமாக வந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்களும் தகவல்களை வெளியிட்டிருக்கின்றன.