கல்லும் கலையும்: கானுறை வேங்கை வேட்டை
வேடனுக்கு வாழ்வாதாரமாகும் வேட்டை, நாடாளும் வேந்தனுக்கு ஆளுமையை நிரூபிக்கும் கொண்டாட்டம் மட்டுமே! இந்த பேருண்மை, 'கானுறை வேங்கை வேட்டை'யாய், நாயக்க சிற்பியின் கைவண்ணத்தில், திருநெல்வேலி, திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில் சித்திர கோபுர தென்மூலையில் சிலையாகி இருக்கிறது! அடர்வனம்; அரசு பரிவார ஆர்ப்பாட்டத்தால் மறைவிலிருந்து வெளியேறிப் பாய்கிறது ஒரு வேங்கை. அதன் பாதையில் பரிவாரத்தில் வந்த ஒரு வீரன்; அவனுக்குப் பின்னால் குதிரை மீது மிடுக்காக அமர்ந்தபடி வேட்டையின் நாயகனான வேந்தன். உயிர் பிழைத்திருக்க, நொடி நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் மூவருக்கும்! சீறும் வேங்கையின் தொண்டையில் வேல் வீசி தன் திறமை நிரூபிக்கிறான் வேந்தன்; அதே நேரம், அதன் பாய்ச்சலை அனிச்சையாய் கேடயம் கொண்டு தடுத்து, அதன்மீது வாள் பாய்ச்சுகிறான் வீரன். மார்பில் குத்த வாய்ப்பிருந்தும் விலாவுக்குள் வாள் இறக்குகிறது அவன் ராஜ விசுவாசம். 'வீரனுக்கு மட்டுமல்ல... எங்களுக்கும் விசுவாசம் உண்டு' என, வேங்கையின் பின்னங்கால் கவ்வியபடி உடன்வந்த வேட்டை நாய்! குதிரை மீது சர்வ அலங்காரத்தில் வேந்தன்; இக்களேபரத்திலும், வேந்தனது குதிரைக்கு பின்னால் ஒருவனை வெண் கொற்றக்குடை பிடிக்க வைத்து, அவனுக்கும் பின்னால் மற்றொரு வனை நிராயுதபாணியாக ஆர்ப்பரித்து குரலெழுப்ப வைத்து, அதிகாரத்தின் அவலச்சுவையை உளியால் செதுக்கி இருக்கிறார் சிற்பி. இந்த 'கல்லோவியம்' வேறுசில மிருகங்களையும் காட்சிகளாக்கி நம்முன் நிறுத்துகிறது; இவ் வேட்டைக்கு பக்கத்தில், காட்டுப்பன்றி ஒன்று வீரன் ஒருவனுடன் மோதுகிறது. நாய் குரைப்பு மற்றும் மனித ஆர்ப்பாட்டத்தால் மிரண்டு, வளையிலிருந்து வெளியேறிய முயலொன்று செய்வதறியாது திகைக்கிறது. 'கல்லின் நுணுக்கம் மட்டுமல்ல... காட்டின் நுணுக்கங்களையும் என் உளி அறியும்' என்கிறது சிற்பியின் கலைத்திறன்.